11
இலங்கையின் இன முரண்பாட்டு அரசியல் வரலாற்றை நாடகமாக சித்தரித்துக் காட்டுதல் என்பது மிகுந்த சவால் நிறைந்த எதிர் விமர்சனங்களை உருவாக்கக்கூடிய கலைப் பணி ஆகும் .
நேற்றைய தினம் திருமறைக்கலா மன்ற அரங்கில் stage darma குழுவின் சிங்கள இளம் நாடகக் கலைஞர்களின் முழு நீள நாடக ஆற்றுகை ஒன்றைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
இலங்கையின் அரசியல் வரலாற்றை 1940களில் இருந்து 2010 அதாவது காலனித்துவ காலத்திற்கு முன்னரும் பின் காலனித்துவ காலத்தையும் போர்க்காலம் நிகழ்ந்த சூழ்நிலையும் ஏழு தசாப்தங்களாக பகுத்து ஏழு காட்சிகளாக சித்திரித்துக் காட்டியிருந்தார்கள்.

உயிர்ச் சாட்சியங்களாக வாழும் சிங்கள மூதாளர்களுடன் ஆய்வு நோக்கில் கலந்துரையாடி அவர்களது வரலாற்று நினைவுகள், ஞாபகங்களை ஆதாரமாகக் கொண்டு இந்நாடகத் தயாரிப்பு மற்றும் ஆற்றுகை நிகழ்த்தப்பட்டதாக நாடகக் குழுவினர் அரங்கில் தெரிவித்திருந்தனர்.
சிறுவர்களை நோக்கியே இந்த நாடகச் செய்தி சொல்லப்பட்டது.
இவ் ஆற்றுகையின் வெளிப்பாட்டு முறையில் அரங்கக் கட்டுமானங்களில் உத்திகளில் உயிர்ப்பொறிமுறை வாத நடிப்பு முறையில் மிகவும் காத்திரமாக அதனை கலைஞர்கள் பாராட்டும் வகையில் மிகவும் சிறப்பாக நிகழ்த்தியிருந்தார்கள் .
எனினும் ஒன்றரை மணி நேரம் நிகழ்ந்த ஆற்றுகையின் பின்னர்
இந்நாடக ஆற்றுகை யின் மையக்கருத்து அது பார்வையாளருக்கு சொல்ல விளையும் செய்தி என்பதின் அடிப்படையில் சில கேள்விகளை முன்னிறுத்தியிருக்கிறது.
இலங்கையின் இன முரண்பாடு தொடர்பாக சிங்கள மக்களின் மனதில்இன்றும் உள்ள நினைவுகள், ஞாபகங்களுக்கிடையிலும் தமிழ் மக்களின் மனங்களில் உள்ளு றைந்துகிடக்ன்ற நினைவுகள் ஞாபகங்களுக்கு இடையிலும் மிகப் பெரிதான வேறுபாடு உள்ளது என்பதை இவ் ஆற்றுகை நிறைவில் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது.
இலங்கையின் அரசியல் இன முரண்பாட்டு வரலாற்றில் தமிழ், சிங்களம் என்ற இனப் பாகுபாடு எப்படி மேற் கிளம்பியது என்பது பற்றி நாடகத்தில் ஒரு பஸ் பிரயாணத்தின் மூலம் உருவகப்படுத்தப்பட்டு காட்சி ப்படுத்தப்பட்டது என்பது வெறும் நுனிப்புல் மேய்ந்த செயலுக்கு ஒப்பானதாகவே கருத முடிகிறது.
ஏனெனில் இங்கு பௌத்த அடிப்படைவாத சிந்தனையின் தோற்றம்பற்றியோ இனவாதம் நிறுவனம் மயப்படுத்தப்பட்ட நிலைமை பற்றியோ அதன் விளைவாக சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொண்ட இன்னல்கள் பற்றியோஇந் நாடகம் பேச முற்படவில்லை…

இது ஞாபக மறதியா? அல்லது நினைவிழப்பா?
ஆனாலும் J .V .P. கிளர்ச்சி அவர்கள் மீதான ஒடுக்கு முறைகள் பற்றி மிகவும் கால வர்த்தமானங்களுடன் தாக்கவன்மையாக நிகழ்த்தப்பட்டிருந்தது என்பது ஏதோ ஒரு உறுத்தலை ஏற்படுத்தாமல் இல்லை.
நாடக ஆற்றுகை என்பது வெறுமனே தகவல் பரிமாற்றத்துக்கான ஊடகச் செயற்பாடு அல்ல…
1990 -2000 ஆண்டுவரையான யுத்த கால வரலாற்றை அரங்கில்
கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பலரை அரங்காக காட்சி அமைப்பாக எடுத்துரைத்துடன் மெலோடி ட்ராமா வகையில் நிகழ்த்தப்பட்டிருந்தது.இது
வரலாற்றை கறிக்கடைக்காரனின் தட்டில் கிடக்கும் செத்த மீனில் தேடிய முயற்சியாகவே தெரிகிறது.
மாறாக எமது வரலாற்றை ஆழமான நீள் சமுத்திரத்திரமொன்றின் அடியில் நீந்துகின்ற உயிர்வாழும் மீன்களில் தேடியிருந்தால் நீங்கள் அறைகூவல் விடுக்கும் நல்லிணக்கம் ஒரு வேளை சாத்தியமாகியிருக்கும்.

2009 போர் முடிவுற்ற பின்னர் மீட்கப்பட்டதாக சொல்லப்பட்டு ஏற்றி வரப்பட்ட தமிழ்மக்கள் வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் முட்கம்பி வேலிகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததையும் அதனை நலன்புரி நிலையமாக உலகுக்காண்பித்ததையும் மக்களை காட்சிப் பொரு
ளாக்கிய கதையையும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
ஓர் விதவைத் தாய் தனது காணாமல் போன புதல்வரின் நினைவுகளை மீட்பது போல்அமைந்த காட்சியில்
அழகியல் அம்சங்கள் ஊடாக சித்திரிக்கப்பட்டு கலைத்துவமாக நிகழ்ந்தது.
பார்வையாளர்கள் உணர்வுபூர்வமாக ஒன்றியிருந்தார்கள்.
எனினும் மல்லிகை பூ பற்றிய ஒரு பாடல் வரி பூஜை வழிபாட்டுடன் மீண்டும் மீண்டும் ஒலிக்கவிடப்பட்டது.பண்பாட்டுடன் ஒருங்கிசையவில்லை.
இவ் ஆற்றுகை யின் மையக்கருத்து நினைவுகள்,ஞாபகங்களூடாக வடிவமைக்கப்பட்ட போதிலும் ஒரு பக்கச் சார்பாக உள் நோக்கத்தோடு வரலாற்றை சொல்ல விளைகிறார்கள் என்ற சந்தேகம் இந்நாடகத்தை முழுமையாக பார்வையிட்ட பின்னர் யாருக்கும் எழ வாய்ப்பில்லைத்தான்.அப்படி நம்பும்படியாக வும் கதை சொல்லப்படும் இல்லை….இருந்தபோதிலும்
அப்படி நானும் நம்பவில்லை
இது ஒரு கலைத்துவ முயற்சி. ஆரோக்கியமான விவாதத்தை தூண்டுவதற்கான களமாகவும் இதனை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
போரில் வெற்றி அடைந்த தரப்பே தோற்றவர்களின் வரலாற்றை எழுதுகிறது
அவர்களுடைய நினைவுகள் ஞாபகங்களையும் தீர்மானிக்கும் உரிமையையும் அத்தரப்பே எடுத்துக் கொள்கிறது .
நினைவுகள், ஞாபகங்கள் என்பது ஒரு சமூகத்தின் பண்பாட்டு உரிமை
ஆனாலும் என்ன…
அந்நினைவுகள் ஞாபகங்களை ஆளும் அதிகாரமே கட்டமைக்கிறது.
அ. சத்தியானந்தன்
நாடக கலைஞர் மற்றும் ஆசிரியர்.