பட மூலாதாரம், Sudipto Bhattacharya/Dwaipayan Mukherjee
-
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, இந்திய செய்தியாளர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
சுபதீப் பட்டாச்சார்யாவுக்கு புதன்கிழமை அதிகாலை அவரது மனைவி சுபஸ்ரீ சக்ரவர்த்தியிடமிருந்து ஒரு செய்தி வந்தது.
காலை 7.57 மணிக்கு நேபாள எல்லையில் இருந்து வெளியேறியதற்கான முத்திரையுடன் தனது பாஸ்போர்ட்டின் புகைப்படத்தை அவர் அனுப்பியிருந்தார்.
இந்த வெளியேறும் முத்திரை, நேபாள எல்லையில் குடியேற்றச் சோதனை நடைமுறைகள் நிறைவடைந்துவிட்டதைக் குறிக்கிறது.
இந்தச் செய்தியைப் பெற்ற ஆறு நிமிடங்களுக்குப் பிறகு, காலை 8.03 மணிக்கு, “நாங்கள் சீனாவுக்குள் நுழைவதற்காகக் காத்திருக்கிறோம்” என்று அவர் மற்றொரு செய்தியை அனுப்பினார். அதன்பிறகு அவரிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை.
சுபஸ்ரீ சக்ரவர்த்தியும் அவருடன் பயணம் செய்த குழுவினரும், தங்களது கைலாஷ் மலை யாத்திரையின் அடுத்த கட்டமாக திபெத்துக்குள் நுழைவதற்காகக் காத்திருந்தனர்.
சுபஸ்ரீ பல ஆண்டுகளாக கைலாஷ் மலையை தரிசிக்க வேண்டும் என்று கனவு கண்டு வந்தார். இந்துக்களைப் பொறுத்தவரை, கைலாஷ் மலை சிவபெருமானின் இருப்பிடமாகவும் புனிதத் தலமாகவும் கருதப்படுகிறது.
43 வயதான சுபஸ்ரீ, நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்துக்குப் பிறகு காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள சுமார் 290 இந்தியர்களில் ஒருவர்.
பட மூலாதாரம், Sudipto Bhattacharya
காணாமல் போனவர்களில் பலர் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் சென்றவர்கள். கொரோனா பெருந்தொற்று மற்றும் அதைத்தொடர்ந்து இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த யாத்திரை, கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது.
பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கைலாஷ் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
சுபஸ்ரீ தனது குடும்பத்தினருடன் அல்லாமல், சுமார் 30 பேர் கொண்ட குழுவுடன் பயணம் செய்தார். அவர் ஒரு நகர மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவத் தொழில்நுட்ப நிபுணராகப் பணியாற்றுகிறார்.
அவசரநிலைகளை கையாள்வதில் அவருக்கு அனுபவம் உள்ளது. அவருக்கு சிபிஆர் மற்றும் தீவிர சிகிச்சை நடைமுறைகள் தெரியும். அவர் உடல்ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதாக அவரது கணவர் தெரிவித்தார்.
ஆனால் இவை எதுவும் அவரது கடைசி செய்திக்குப் பிறகு என்ன நடந்தது என்பது குறித்து அவரது கணவர் சுதீப்தோ பட்டாச்சார்யாவுக்கு எந்தத் தகவலையும் அளிக்கவில்லை.
“காலை 8.03 மணிக்குப் பிறகு என்ன நடந்தது என்பது குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியவில்லை” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Sudipto Bhattacharya
பல வருட காத்திருப்பு
சுபஸ்ரீ பல ஆண்டுகளாக இந்தப் பயணத்துக்காகக் காத்திருந்தார்.
அவர் காணாமல் போவதற்கு சில நாட்களுக்கு முன்பு காத்மாண்டுவிலிருந்து வீட்டுக்கு அனுப்பிய புகைப்படங்கள், இந்தப் பயணம் குறித்து அவர் எவ்வளவு உற்சாகமாக இருந்தார் என்பதை வெளிப்படுத்துகின்றன.
அங்குள்ள கிராமப்புறப் பகுதிகள் மிகவும் அழகாக இருப்பதாக அவர் தனது கணவரிடம் கூறியிருந்தார்.
“அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார். இது அவரது கனவுப் பயணம்” என்று அரசு அதிகாரியான பட்டாச்சார்யா கூறினார்.
அவரது பயணம் ஆகஸ்ட் 21, வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கொல்கத்தாவில் இருந்து மிதிலா எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்ட அவர், ஆகஸ்ட் 22-ஆம் தேதி ரக்சால் சென்றடைந்தார்.
அங்கிருந்து எல்லையைக் கடந்து பிர்கஞ்ச் சென்ற அவர், பேருந்தில் காத்மாண்டுவுக்குப் புறப்பட்டார். அன்றிரவு அவர் காத்மாண்டுவை சென்றடைந்தார்.
காத்மாண்டுவில் மூன்று இரவுகள் தங்கிய அவர், அங்குள்ள இடங்களைச் சுற்றிப் பார்த்தார்.
பின்னர், ஆகஸ்ட் 25-ஆம் தேதி காலை, அந்தக் குழுவினர் பேருந்தில் காத்மாண்டுவிலிருந்து சியாப்ருபேசி நோக்கிப் புறப்பட்டனர்.
காத்மாண்டுவிலிருந்து சுமார் 122 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ள இந்த சிறிய மலைப்பகுதி, லாங்டாங் மலையேற்றப் பகுதிக்கான நுழைவாயில் போன்றது. இந்தப் பயணம் சுமார் 12 மணி நேரம் நீடித்தது. ஆனால், பயணம் சுமூகமாக இருக்கவில்லை.
நிலச்சரிவு காரணமாக அவர்களது பாதை சுமார் நான்கு மணி நேரம் தடைப்பட்டது. ராணுவத்தினர் சாலையைச் சீரமைத்த பிறகு அவர்கள் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தனர்.
எனினும், சுபஸ்ரீ தனது கணவரிடம் பேசியபோது, வானம் தெளிவாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
வரவிருந்த ஆபத்தை உணர்த்தும் வகையில் அங்கு பெரிதாக எதுவும் தென்படவில்லை.
“வானிலை நன்றாக இருப்பதாகவும், மிகவும் வெப்பமாக இருப்பதாகவும், அவ்வப்போது மட்டுமே மழை பெய்வதாகவும் அவர் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார்” என்று அவர் கூறுகிறார்.
அடுத்த நாள் காலை, ஆகஸ்ட் 26-ஆம் தேதி, காலை 7 மணிக்குப் பிறகு சுபஸ்ரீ தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து புறப்பட்டார்.
பட்டாச்சார்யா அவருடன் தொலைபேசியில் பேசினார். அதன்பிறகும் இருவரும் குறுஞ்செய்திகள் மூலம் தொடர்பில் இருந்தனர்.
சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, நேபாளத்தின் குடியேற்றச் சோதனை நடைமுறை நிறைவடைந்துவிட்டதாகவும், திபெத்துக்குள் நுழைவதற்காக குழுவினர் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நேபாளத்தின் குடியேற்றச் சோதனை நடைமுறையை முடித்த பிறகு, யாத்திரிகர்கள் எல்லையை நடந்தே கடந்து சீனாவின் குயிரோங் பகுதியில் உள்ள குடியேற்ற மையத்தை சென்றடைவார்கள்.
பட மூலாதாரம், Bhattacharya
வெள்ளம் ஏற்பட்டபோது தனது மனைவி சீன குடியேற்ற அலுவலகக் கட்டடத்திற்குள் அல்லது அதன் அருகில் இருந்திருக்கலாம் என்று பட்டாச்சார்யா நம்புகிறார்.
“திபெத்தை நோக்கிச் சென்ற பிறகு தகவல் தொடர்பில் பிரச்னைகள் ஏற்படும் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் அடுத்த செய்திக்காகக் காத்திருந்தேன்” என்று அவர் கூறினார்.
பிற்பகல் 3 மணியளவில் ஊடகங்களில் வெள்ளம் குறித்த செய்தியை அவர் பார்த்தார். உடனடியாக தனது மனைவி சென்றிருந்த குழுவில் உள்ள யாத்திரிகர்களைத் தொடர்புகொள்ள முயன்றார். யாரும் பதிலளிக்கவில்லை.
பின்னர், சுற்றுலா ஏற்பாட்டாளரையும், அந்தக் குழுவுடன் சென்றிருந்த இரண்டு மேலாளர்களையும் தொடர்புகொண்டனர். யாரும் பதிலளிக்கவில்லை.
அதன்பிறகு, சுபஸ்ரீ குறித்து அவரது குடும்பத்தினருக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
“அவர்கள் மீட்கப்பட்டார்களா? சீனாவில் மீட்கப்பட்டவர்களில் இந்தக் குழுவும் இருந்ததா? எங்களுக்கு கூடுதல் தகவல் தேவை” என்று அவர் கேட்கிறார்.
வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பாக தனது மனைவியும் மற்றவர்களும் சீனப் பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.
ஆனால், யார் எல்லையைக் கடக்க முடிந்தது, அதன்பிறகு அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவரிடம் எந்த உறுதியான தகவலும் இல்லை.
“சீன அரசிடம் இருந்து எனக்கு ஒரு பட்டியல் வேண்டும். காணாமல் போனவர்கள், உயிரிழந்தவர்கள், மீட்கப்பட்டவர்கள் என அனைவரின் விவரங்களும் எனக்குத் தேவை. எங்களுக்கு சமீபத்திய தகவல்கள் தேவை” என்று அவர் கேட்டுக்கொள்கிறார்.
“நாங்கள் தூக்கமில்லாத இரவுகளை கழித்து வருகிறோம். எங்கள் நேரம் முழுவதையும் தொலைபேசியிலேயே செலவிடுகிறோம்” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
ரீனாவின் குடும்பம் நிச்சயமற்ற நிலையில் உள்ளது
ரீனா பானர்ஜியின் (54) குடும்பத்தினரின் நிலைமை இன்னும் குழப்பத்தில் உள்ளது.
அவருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டபோது, அவர் எல்லையின் எந்தப் பகுதியில் இருந்தார் என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை.
கொல்கத்தாவைச் சேர்ந்த திருமணமாகாத தனியார் துறையில் பணியாற்றும் ஆசிரியரான ரீனா, அதே கைலாஷ் யாத்திரைக் குழுவின் ஒரு பகுதியாக, சுற்றுலா ஏற்பாட்டாளருடன் தனியாகப் பயணம் செய்தார்.
அதுவரை அவரது பயணம் சுமூகமாகவே சென்றுகொண்டிருந்தது. காத்மாண்டுவில் இருந்தபோது, குடும்பத்தினர் அவருடன் வீடியோ காலில் பேசியதாக அவரது உறவினர் த்வைபாயன் முகர்ஜி தெரிவித்தார்.
“அவர் மகிழ்ச்சியாக இருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பயணத்தை மேற்கொண்டிருந்தார்” என்று அவர் கூறினார்.
ரீனாவுக்கு மலைப்பகுதிகள் புதிதல்ல. ஏற்கெனவே அவர் மலைப்பகுதிகளுக்குச் சென்றுள்ளார். குடும்பத்தினருடன் மலையேற்றத்துக்கும் சென்றுள்ளார்.
“அவர் மிகவும் ஆரோக்கியமாக இருந்தார். நாங்கள் ஒன்றாக மலையேற்றத்துக்குச் சென்றிருக்கிறோம். மலைப்பகுதிகளுக்குச் செல்வது எங்களது வழக்கமாக இருந்தது” என்று முகர்ஜி கூறினார்.
முந்தைய நாள் பயணத்தின்போது ஏற்பட்ட நிலச்சரிவு குறித்தும் அவர் முகர்ஜியிடம் கூறியிருந்தார். அங்கு சுமார் நான்கு மணி நேரம் குழுவினர் சிக்கியிருந்ததாக அவர் தெரிவித்தார்.
அடுத்த நாள் காலை, சுற்றுலா ஏற்பாட்டாளர் குழுவினரின் புகைப்படம் ஒன்றை அனுப்பினார். அதில், நேபாள குடியேற்றச் சோதனை மையத்திற்கு வெளியே ரீனா நின்றுகொண்டிருந்தார்.
சுபஸ்ரீயைப் போலவே ரீனாவும் வெளியேறும் முத்திரையைப் பெற்றிருந்ததாக முகர்ஜி கூறினார். அதன்பிறகு அவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.
“அவர்கள் எல்லையைக் கடந்தார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் சீனப் பகுதியில் இருக்கிறார்களா அல்லது நேபாளப் பகுதியில் இருக்கிறார்களா என்பதுகூட இன்னும் எங்களுக்குத் தெரியவில்லை” என்று முகர்ஜி கூறுகிறார்.
பட மூலாதாரம், Dwaipayan Mukherjee
இரண்டு வாரங்கள் நீடிக்கும் இந்தப் பயணம் சுபஸ்ரீ மேற்கொண்ட முதல் யாத்திரையாகும்.
பல ஆண்டுகளாக இது அவரது கனவாக இருந்தது.
ரீனாவும் நீண்ட காலமாக இந்தப் பயணத்தை மேற்கொள்ள விரும்பியிருந்தார். மலைப்பகுதிகள் அவருக்குப் புதிதல்ல.
இந்த யாத்திரைக்காக இருவரும் ஒரு குழுவில் இணைந்திருந்தனர். இருவரும் நேபாளத்தின் குடியேற்றச் சோதனை நடைமுறையை முடித்ததாகத் தெரிகிறது. இருவரும் எல்லையைக் கடந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நேபாள அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ காணாமல் போனோர் பட்டியலில் அவர்களது பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால், அதனால் பெரிதாக எந்தத் தெளிவும் கிடைக்கவில்லை.
அவர்கள் எங்கு இருக்கிறார்கள், பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதுகூட அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியவில்லை. கொல்கத்தாவைச் சேர்ந்த சுற்றுலா ஏற்பாட்டாளர் ஒருவர், அந்தக் குழுவினரின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இரு குடும்பங்களுக்கும், இந்தப் பயணம் ஒரே ஒரு விடை தெரியாத கேள்வியுடன் முடிந்துள்ளது.
அந்தப் பெண்களால் எல்லையைக் கடக்க முடிந்ததா?
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு