யாழ்ப்பாணம், வலிகாமம், வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ “பங்களா முன்பாக இன்று (12) வெள்ளிக்கிழமை எட்டாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில் , இன்றைய தினமும் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
அதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதி இப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து 37 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில் , அன்றைய தினம் மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டத்தினை முன்னெடுக்க காணி உரிமையாளர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





The post இராணுவமே வெளியேறு ; வலி. வடக்கில் எட்டாவது வெள்ளியும் தொடரும் போராட்டம் appeared first on Vanakkam London.