42
இலண்டனில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள இரு பெரும் போராட்டங்களை முன்னிட்டு, அசம்பாவிதங்களைத் தவிர்க்க 4,000க்கும் மேற்பட்ட பொலிஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பாலஸ்தீன ஆதரவு ‘நக்பா தின’ பேரணி மற்றும் வலதுசாரி அமைப்பான ‘யுனைட் தி கிங்டம்’ (Unite the Kingdom) ஆகிய இரு தரப்பு போராட்டக்காரர்களுக்கிடையே மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலண்டன் மாநகர பொலிஸார் (Metropolitan Police) இந்த போராட்டங்களின் போது வன்முறை மற்றும் வெறுப்புப் பேச்சுகள் (hate speech) இடம்பெற வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
இதனையடுத்து சுமார் 4.5 மில்லியன் பவுண்டுகள் செலவில் விரிவான பாதுகாப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
போராட்டங்களின் போது முதல் முறையாக நேரடி முக அடையாளத் தொழில்நுட்ப கேமராக்கள் (live facial recognition cameras) பயன்படுத்தப்பட உள்ளன. மேலும், சந்தேகத்திற்குரிய நபர்களைக் கண்காணிக்க ட்ரோன்கள் (Drones) மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும்.
அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ள, அரிதாகப் பயன்படுத்தப்படும் கவச வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மோப்ப நாய்கள், குதிரைப்படை மற்றும் கலகத் தடுப்பு உபகரணங்களுடன் பொலிஸார் பணியில் இருப்பார்கள்.
அதே நாளில் வேம்ப்ளி மைதானத்தில் நடைபெறும் எஃப்.ஏ கோப்பை (FA Cup) இறுதிப் போட்டிக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள் என்பதால் பொலிஸாருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால், இலண்டனுக்கு வெளியே இருந்து 660 பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.