• Thu. Sep 3rd, 2026

24×7 Live News

Apdin News

எம்.பி. பதவியில் இருந்து விலகுவதாக ஸ்டார்மர் அறிவிப்பு

Byadmin

Sep 2, 2026


இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், சர்வதேச விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதன்மூலம் அவர் 2015ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் இலண்டனின் ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ரஸ் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. நீண்டகாலமாக தொழிலாளர் கட்சியின் (Labour) கோட்டையாக இருந்து வரும் இந்தத் தொகுதியில், 2024 பொதுத்தேர்தலில் ஸ்டார்மர் 11,000க்கும் அதிகமான வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தார்.

ஜூலை மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஸ்டார்மர், அடுத்த இங்கிலாந்து பொதுத்தேர்தல் 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அதுவரை எம்.பி.யாகத் தொடரப் போவதாக முன்னதாக தெரிவித்திருந்தார்.

எனினும், அவரது வாரிசான ஆண்டி பர்ன்ஹாம் நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையை நிகழ்த்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் வெளியிட்ட ஆச்சரியமான அறிவிப்பில், சர்வதேச விவகாரங்கள் மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பது உள்ளிட்ட விடயங்களில் பணியாற்றுவதற்காக நாடாளுமன்றத்தை விட்டு விலகுவதாக அவர் தெரிவித்தார்.

தனது முன்னோடிக்கு மரியாதை செலுத்திய பர்ன்ஹாம், உக்ரைன் தொடர்பான ஸ்டார்மரின் பணிகளையும், அவரது அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டு, தற்போது நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ள ஹில்ஸ்பரோ சட்டத்தையும் சுட்டிக்காட்டினார். இந்தச் சட்டம், அரச அதிகாரிகளின் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

“நீதிக்காகப் போராடுபவர்கள் உள்ளிட்ட இந்த நாட்டின் மக்களுக்காக அவர் தனது வாழ்நாள் முழுவதையும் பொது சேவைக்காக அர்ப்பணித்துள்ளார்,” என பர்ன்ஹாம் தெரிவித்தார்.

தனது பதவி விலகல் தொடர்பாக Camden New Journal பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த ஸ்டார்மர், 11 ஆண்டுகளாக இலண்டன் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியமை தனக்கு “மிகப்பெரிய கௌரவமும் சிறப்புரிமையும்” எனத் தெரிவித்தார். இதன்மூலம் அவர் தொடர்ந்து எம்.பி.யாக இருப்பாரா என்பது தொடர்பாக பல வாரங்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தான் தனது வாரிசிடம் “பொறுப்பை ஒப்படைக்க” தயாராக இருப்பதாகவும், நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறுவதற்கு இது “சரியான நேரம்” என்றும் அவர் தெரிவித்தார்.

“நான் இப்போது வேறு விடயங்களில் கவனம் செலுத்தப் போகிறேன். வேகமாக மாறிவரும் உலகில் சர்வதேச விவகாரங்கள், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை இதில் அடங்கும்,” என ஸ்டார்மர் கூறினார்.

By admin