0
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள லட்சக்கணக்கான வீடுகளுக்கான எரிசக்தி விலைகள், இன்று புதன்கிழமை முதல் 13 சதவீதம் உயர்கின்றன.
இதனால், மின்சாரக் கட்டணத்தை முறைப்படுத்துபவரான ‘Ofgem’இன் விலைக் கட்டுப்பாட்டு வரம்புக்குள் (price cap) வரும் வாடிக்கையாளர்கள், தங்களின் தற்போதைய மீட்டர் அளவீட்டை (meter reading) உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சராசரி பயன்பாடு கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதம் சுமார் £18 கூடுதல் சுமை ஏற்படும்.
இதில் எரிவாயு (gas) கட்டணம் 24 சதவீதம் மற்றும் மின்சாரக் கட்டணம் 5 சதவீதம் உயர்கின்றன.
உங்களிடம் ஸ்மார்ட் மீட்டர் (smart meter) இல்லையென்றால், புதிய விலையேற்றத்துக்கு முன்னதாகப் பயன்படுத்திய மின்சாரத்துக்குப் பழைய கட்டணத்திலேயே பணம் செலுத்துவதை உறுதி செய்ய, இந்த அளவீடு அவசியம்.
இல்லையெனில், பழைய பயன்பாட்டிற்கும் புதிய கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் போர் மற்றும் ஈரானுடனான மோதல் காரணமாக எரிவாயு விலை அதிகரித்ததே இந்த உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
ஈரானில் போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், அதன் நீண்டகால தாக்கம் சந்தையில் தொடரும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
‘பிக்ஸட் டேரிஃப்’ (fixed tariff) எனப்படும் நிலையான கட்டணத் திட்டத்தில் உள்ள சுமார் 40 சதவீத வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் ஒப்பந்தக் காலம் முடியும் வரை இந்த விலை உயர்வு இப்போதைக்குப் பொருந்தாது.
தற்போது நிலுவையில் உள்ள மின்சாரக் கட்டணத் தொகை சாதனை அளவாக £4.79 பில்லியனாக அதிகரித்துள்ளது.
இதனால், ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்கு உதவ ‘சமூகக் கட்டணத் திட்டங்களை’ (social tariffs) அறிமுகப்படுத்த வேண்டும் என்று தொழிற்சங்க காங்கிரஸ் (TUC) போன்ற அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
மின்சாரக் கட்டணம் செலுத்த சிரமப்படுபவர்கள், தங்களின் சேவை வழங்குநரைத் (supplier) தொடர்புகொண்டு தகுந்த உதவித் திட்டங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

