0
வடக்கு அயர்லாந்தின் பல்கலைக்கழகங்கள், கல்விக்கட்டண உயர்வு என்பது மாணவர்கள் அதிக பணத்தைத் திருப்பிச் செலுத்த வழிவகுக்கும் என்ற வாதம் உதவாதது மற்றும் யதார்த்தமற்றது என்று கூறியுள்ளன.
இது தொடர்பாக அல்ஸ்டர் பல்கலைக்கழகம் (UU) மற்றும் பெல்ஃபாஸ்ட் குவீன்ஸ் பல்கலைக்கழகம் (QUB) ஆகியவை, வெஸ்ட்மின்ஸ்டர் குழுவிடம் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.
மாணவர் கடன்கள் வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால், பட்டதாரிகள் தாங்கள் ஈட்டும் வருமானத்துக்கு ஏற்பவே கடனைத் திருப்பிச் செலுத்துகின்றனர். இதனால், கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் பட்டதாரிகள் தற்போதைய நிலையை விட கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டியிருக்காது என்று அல்ஸ்டர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மாணவர் கடன் குறித்த பொது விவாதங்கள், மாணவர்கள் உண்மையில் எவ்வளவு திருப்பிச் செலுத்துகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தாமல், மொத்தக் கடன் தொகையை மட்டுமே பெரிதுபடுத்துவதாக அவை விமர்சித்துள்ளன.
பட்டதாரிகள் தங்கள் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்த பிறகு, ஆண்டு வருமானம் £26,900க்கு மேல் இருந்தால் மட்டுமே கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்குவார்கள்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால், மீதமுள்ள தொகை ரத்து செய்யப்படும்.
தற்போது வடக்கு அயர்லாந்து மாணவர்கள் ஆண்டுக்கு £4,985 கட்டணமாகச் செலுத்துகின்றனர். இதனை கிட்டத்தட்ட £6,000 ஆக உயர்த்த பல்கலைக்கழகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
வடக்கு அயர்லாந்தின் உயர்கல்விக்கான நிதி மாதிரி தற்போது தோல்வியடைந்துள்ளதாகவும், பல்கலைக்கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் அல்ஸ்டர் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. இதன் காரணமாக அந்தப் பல்கலைக்கழகம் சுமார் 450 வேலைவாய்ப்புகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், மாணவர் சங்கங்கள் இந்தத் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கல்விக்கட்டண உயர்வு மாணவர்களுக்குப் பெரும் பேரழிவாக அமையும் என்றும், இது உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவர்களைத் தடுக்கும் என்றும் மாணவர் சங்கத் தலைவர் ஏமி ஸ்மித் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், மாணவர் கடன் விதிமுறைகள் குறித்து மாணவர்களுக்குச் சரியான புரிதல் இல்லை என்றும், இது தவறான முறையில் விற்கப்பட்ட கடன் ஒப்பந்தம் போன்றது என்றும் எம்.பிக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.