5
கிழக்கு இலண்டனில் முன்னாள் ஜெபக்கூடம் ஒன்றில் தீவைப்புத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒரு ஆணையும் பெண்ணையும் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் கைது செய்தனர்.
45 வயதான ஆணும், 52 வயதான பெண்ணும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை, மே 10) தீ வைப்பதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (மே 5) அதிகாலை 5.15 மணியளவில் டவர் ஹாம்லெட்ஸ், நெல்சன் தெருவில் உள்ள முன்னாள் ஜெபக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தீயணைப்பு வீரர்கள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அந்தக் கட்டிடத்தின் முன்புறத்தில் இருந்த ஒரு வாயில் கதவும் பூட்டும் சிறிது சேதமடைந்தன. எவருக்கும் காயம் ஏற்படவில்லை. கமாண்டர் ஹெலன் ஃபிளனகன் கூறுகையில், “இந்தத் தாக்குதல் குறித்த எங்கள் விசாரணையில் இன்றைய கைதுகள் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். சமீப வாரங்களில் யூத, இஸ்ரேலி, ஈரானிய இடங்களை இலக்காகக் கொண்ட தீவைப்புத் தாக்குதல்கள் மற்றும் பிற சம்பவங்களில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதே எங்கள் இலக்காகும். சமூகங்கள் மீதான இந்த வெறுப்புத் தாக்குதல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்றார்.
டிடெக்டிவ் சூப்பிரண்டென்டென்ட் ஆலிவர் ரிக்டர் கூறுகையில், “இந்தத் தாக்குதல், ஒரு உள்ளூர் சோமாலி முஸ்லிம் அமைப்புக்கு விற்பனை செய்யும் நிலையில் இருந்த ஜெபக்கூடத்தில் நடந்துள்ளது.
இந்தக் கொடூரச் செயலால் அப்பகுதியைச் சேர்ந்த அனைத்து மதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக உணர்கிறோம். எந்த வெறுப்புக் குற்றமும், அது எவருக்கு எதிரானதாக இருந்தாலும், பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார்.