தென்னிந்திய நடிகை ஷகிலா அதிகளவில் கைத்தொலைபேசி பயன்படுத்தியதால், தனக்கு கழுத்தில் பாதிப்பு ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் வலம் வருபவர் நடிகை ஷகிலா. இவர் தமிழ்த் திரைப்படங்களில் விஜய், அஜித், சிலம்பரசன் உள்ளிட்ட நடிகர்களுடன் சிறு பாத்திரங்களிலும் நடித்துள்ளார். மேலும், தனியார் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார்.
இந்நிலையில், இவர் திடீரென கழுத்தில் அறுவைச் சிகிச்சை செய்திருப்பது இரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, அவர் காணொளி வெளியிட்டு தெரிவித்திருப்பதாவது,
நான் அதிக நேரம் கைத்தொலைபேசியை பயன்படுத்துவேன். ஒன்லைன் விளையாட்டுகளை அதிகம் விரும்பி விளையாடுவேன்.
படுக்கையில் ஒரு பக்கமாய்ப் படுத்துக்கொண்டு, பல மணிநேரம் விளையாடுவேன். இதன் விளைவாக கழுத்தில் உள்ள முக்கிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் தற்போது அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இந்தச் சிகிச்சைக்கு இந்திய மதிப்பில் ரூ. 3 இலட்சம் செலவானதுடன், சாப்பிடுவது, நடப்பது போன்ற அடிப்படை தேவைகளுக்குக்கூட ஏனையவர்களின் உதவி தேவைப்படுகிறது என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுவர்களிடம் கைத்தொலைபேசி பெற்றோர் கொடுக்க வேண்டாம் எனவும் அறிவுரை தெரிவித்துள்ளார்.
அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ள நடிகை ஷகிலா, விரைவில் குணமடைய வேண்டும் என அவரது இரசிகர்கள் பலரும் இணையத்தில் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
The post கைத்தொலைபேசியால் நடிகை ஷகிலாவுக்கு வந்த வினை | கழுத்தில் அறுவைச் சிகிச்சை! appeared first on Vanakkam London.