• Tue. Aug 18th, 2026

24×7 Live News

Apdin News

சமூக ஊடகங்களில் அவதூறு : குற்றப்புலனாய்வு பிரிவில் கெமுனு விஜேரத்ன முறைப்பாடு!

Byadmin

Aug 17, 2026


இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின்  தலைவர் கெமுனு விஜேரத்ன, சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அவதூறுப் பிரசாரங்கள் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘மெட்ரோ பஸ் திட்டம் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்துக்களைத் தொடர்ந்து, பல்வேறு சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டே இம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கெமுனு விஜேரத்ன,

மெட்ரோ பஸ் என்ற கருத்துப்படிமம் புதிதொன்றல்ல எனவும், தாம் ஏற்கனவே போக்குவரத்து அமைச்சிடம் இது போன்றதொரு திட்ட முன்மொழிவைச் சமர்ப்பித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்தாமல் சீன எக்ஸிம் வங்கியின்  நிதியுதவியுடன் இத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான திட்ட வரைபை தாம் சமர்ப்பித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் இதுபோன்றதொரு முயற்சி தொடங்கப்பட்ட போதிலும், பெருமளவிலான பண விரயத்திற்கும் நஷ்டத்திற்கும் பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தினார்.

மேலும், தற்போது மெட்ரோ பஸ் சேவைக்காகப் பரிந்துரைக்கப்படும் பஸ்களைப் போன்ற அமைப்பைக் கொண்ட பஸ்கள், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே தனியார் நிறுவனம் ஒன்றினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அக்காலகட்டத்தில் அதுபோன்ற சுமார் 60 பஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், மேலும் 20 பஸ்கள் பனகொட பகுதியிலுள்ள வளாகம் ஒன்றில் இன்னமும் பயன்பாடின்றி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக எரிபொருள் பயன்பாடு மற்றும் பராமரிப்புச் செலவுகளைக் கருத்திற் கொண்டு பார்க்கும்போது, இப் புதிய மெட்ரோ பஸ் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் மற்றும் இயங்குதளச் செலவுகள் கேள்விக்குறியாகவே உள்ளதாகத் தெரிவித்த அவர், இக் கருத்துருவாக்கம் புதியது அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

மெட்ரோ பஸ் திட்டம் குறித்து கெமுனு விஜேரத்ன வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே, அவர் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

By admin