16
வடக்கு நைஜர் பகுதியில் உள்ள சஹாரா பாலைவனத்தின் தொலைதூரப் பகுதியில், பயணிகளை ஏற்றிச் சென்ற லொறி பழுதாகி நின்றதால், குடிநீரின்றி தாகத்தால் குறைந்தது 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள், மாலியில் நடைபெற்ற ஈத் அல்-அதா (பக்ரீத்) கொண்டாட்டங்களில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தனர்.
நைஜர் மற்றும் அல்ஜீரியா நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியான அசாமாகாவிலிருந்து (Assamaka) மேற்கே 80 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாலியிலிருந்து புறப்பட்ட அந்த லொறி திட்டமிடப்பட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றுள்ளது. லொறி பழுதானதைத் தொடர்ந்து, ஓட்டுநரும் பயணிகளும் பல நாட்களாக அதனைச் சரிசெய்ய முயன்றும் தோல்வியடைந்தனர். கடும் வெப்பம் நிலவும் அப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத நிலையில், தண்ணீர் தீர்ந்துபோனதால் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தக் குழுவில் இருந்தவர்களில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அவர்கள் பாலைவனத்தைக் கடந்து அசாமாகா பகுதியை அடைந்து அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், நகராமல் நின்ற லொறியின் அடியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சடலங்களைக் கண்டெடுத்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் நைஜர் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இந்த மீட்புப் பணியின்போது, சுமார் 60 பயணிகளுடன் பேட்டரி பழுது காரணமாக மூன்று நாட்களாகத் தவித்துக்கொண்டிருந்த மற்றொரு லொறியையும் மீட்புக் குழுவினர் கண்டறிந்தனர். அவர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டதை அடுத்து, அவர்கள் பாதுகாப்பாகத் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
சிறந்த வாழ்க்கைச் சூழலைத் தேடி இளைஞர்கள் இத்தகைய ஆபத்தான பாலைவனப் பாதைகளைத் தேர்ந்தெடுப்பதும், அங்கு நேரிடும் விபத்துகளும் தொடர்கதையாகி வருவதாக உள்ளூர் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
