2
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரிகளைத் தவிர்ப்பதற்காக, பிற நாடுகள் வழியாக பொருட்கள் திசைதிருப்பப்படும் உலகளாவிய விநியோகச் சங்கிலி வலையமைப்பு தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இலங்கையும் இந்தியாவும் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக மற்றும் உற்பத்திக் கொள்கை அலுவலகம் (Office of Trade and Manufacturing Policy) வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, உலகளாவிய வர்த்தக ஓட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் சீனப் பொருட்கள் இடைநிலை நாடுகள் வழியாக அமெரிக்கச் சந்தையை சென்றடையும் முறை குறித்து கவனம் செலுத்துகிறது.
“The Great Transshipment Scam” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், அதிகளவிலான அமெரிக்க இறக்குமதி வரிகளைத் தவிர்க்கும் நோக்கில் சீனப் பொருட்கள் பல்வேறு இடைநிலை நாடுகள் வழியாக மறுஏற்றுமதி செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 40க்கும் மேற்பட்ட நாடுகள் அடங்கியதாகக் கூறப்படும் “Shadow Transshipment Network” எனப்படும் மறுஏற்றுமதி வலையமைப்பும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் இலங்கை “Tier 3” பொருளாதார நாடுகளின் பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் மூலோபாய புவியியல் அமைவிடம், துறைமுகங்கள் மற்றும் ஏனைய தளவாட உள்கட்டமைப்பு, சேமிப்பு வசதிகள் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த தொழிலாளர் செலவு ஆகியவை அதன் உலகளாவிய விநியோகச் சங்கிலி முக்கியத்துவத்தை அதிகரிப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
அத்துடன், இலங்கை, பங்களாதேஷ், கம்போடியா, லாவோஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் “Southeast Asian Microhubs” எனப்படும் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நாடுகள் இலகுரக உற்பத்தி, ஏற்றுமதி செயலாக்கம் மற்றும் பிராந்திய விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பங்களிப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
எவ்வாறாயினும், இலங்கை தொடர்பாக குறிப்பிட்ட சட்டவிரோத நடவடிக்கை, குற்றச்சாட்டு அல்லது விசாரணை குறித்து இந்த அறிக்கையில் நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்பது முக்கியமானதாகும். இலங்கையின் விநியோகச் சங்கிலி மற்றும் வர்த்தகப் பங்கு தொடர்பான நிலைப்பாட்டிலேயே அது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறுபுறம், இந்தியா “Tier 1” நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பெரிய அளவிலான தொழில்துறை உற்பத்தித் தளங்களைக் கொண்ட நாடுகளின் பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ (Peter Navarro), இந்தியாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டு, அமெரிக்க வரிகளைத் தவிர்ப்பதற்காக இந்தியாவை இடைநிலை நாடாகப் பயன்படுத்தும் நடைமுறையை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் என எச்சரித்துள்ளார்.