(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே சிஜேபி-யின் பிரதான கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், இந்த பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தர்மேந்திர பிரதான் தனது பதவி விலகல் குறித்த தகவலை சமூக ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், “ஜந்தர் மந்தர் மற்றும் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சூழலை தேசவிரோத சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது; நாட்டின் ஒற்றுமை காக்கப்பட வேண்டும்; இந்தியாவின் ஒரு மாணவரின் எதிர்காலம் கூட சட்டச் சிக்கல்களில் சிக்கிக்கொள்ளக் கூடாது; நமது குழந்தைகள் தங்கள் நேரத்தை படிப்பிலும், சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதிலும் செலவிட வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, எனது ராஜிநாமா கடிதத்தை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக, டெல்லியின் ஜந்தர் மந்தரில் அவருக்கு எதிராக சிஜேபி அமைப்பு கடந்த ஒரு மாதமாகப் போராட்டம் நடத்தி வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் அவர் பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தன.
தர்மேந்திர பிரதான் ராஜிநாமா அறிவிப்பு வெளியானதுமே டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி போராட்டம் நடக்கும் இடத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பட மூலாதாரம், ANI
தர்மேந்திர பிரதான் தனது அறிக்கையில் கூறியது என்ன?
தர்மேந்திர பிரதான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், “நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சீர்திருத்தத்திற்காக நான் அர்ப்பணித்துள்ளேன். வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தொலைநோக்கு கல்வி முறை ஒரு வலுவான தேசத்தின் அடித்தளம் என்று நான் எப்போதும் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
“நாட்டின் இளைஞர்களின் அபிலாஷைகள், உணர்வுகள் மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகளை நான் ஆழமாக மதிக்கிறேன். இந்தியாவின் இளம் தலைமுறையினரின் கனவுகளை நனவாக்குவது அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையில் நம் அனைவரின் தார்மீக அர்ப்பணிப்பாகும். பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ் நாட்டுக்கு சேவை செய்ய எனக்குக் கிடைத்த வாய்ப்புக்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்தும் அறிக்கையில் பேசியுள்ள தர்மேந்திர பிரதான், “முதல் நாளில் இருந்தே நான் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டேன், இந்தச் சூழ்நிலையில் இருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை. தேர்வு மாஃபியாவால் எந்தவொரு திறமையான மாணவரின் எதிர்காலமும் பாழாக விடமாட்டோம், எந்தவொரு மாணவருக்கும் அநீதி நடக்க விடமாட்டோம் என்பதே எனது தீர்மானமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
“இந்த நேரத்திலும்கூட, பொறுப்பான பதவிகளில் இருந்தவர்கள் பல மாணவர்களைத் தவறாக வழிநடத்த, தடைகளை உருவாக்க முயன்றனர், இது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக” குறிப்பிட்டுள்ள அவர், “ஜந்தர் மந்தரிலும் நாட்டிலும் ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது, நாட்டின் ஒற்றுமை பேணப்பட வேண்டும், இந்தியாவில் ஒரு மாணவரின் எதிர்காலம்கூட சட்டச் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளக் கூடாது, நமது பிள்ளைகள் தங்கள் நேரத்தைப் படிப்பில் செலவிட வேண்டும், ஒரு தொழிலை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும், இதையெல்லாம் மனதில் கொண்டு, நான் எனது ராஜிநாமாவை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.