
-
- எழுதியவர், எண்டாங் நூர்தின் மற்றும் ரெபேக்கா ஹென்ஷ்கே, பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன்ஸ்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் பாலியல் வன்கொடுமை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
தொலைபேசியின் மறுமுனையில் கேட்ட அந்தக் குரல் யுஸ்ரோன் அஸ்ஸாஹிதியின் வயிற்றைப் புரட்டிப் போட்டது. அவசரமாகத் தன்னை அழைக்குமாறு குறுஞ்செய்தி அனுப்பியிருந்த தனது சகோதரியின் எண்ணுக்குத்தான் அவர் அழைத்திருந்தார். ஆனால், மறுமுனையில் பேசியது அவரது சகோதரி அல்ல – யுஸ்ரோனின் முன்னாள் தலைமை ஆசிரியர். அவர் யுஸ்ரோனின் குடும்ப வீட்டில் இருந்தார்.
“அவர் என்ன பேச விரும்புகிறார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. மிக சரியாகத் தெரியும்,” என்கிறார் யுஸ்ரோன்.
மாணவர்களால் “அபா” (“தந்தை”) என்று அழைக்கப்பட்ட அஹ்மத் இமானுத்தீன் தனது நற்பெயரை பாதுகாக்க வேண்டிய தேவை இருந்தது. இந்தோனேசியாவின் லொம்போக் தீவில் உள்ள இஸ்லாமிய உறைவிடப் பள்ளி ஒன்றின் மதிக்கப்பட்ட தலைவராக அவர் இருந்தார். ஆனால், தான் பாலியல் அத்துமீறல் செய்ததாகக் கூறும் பல மாணவர்களிடமிருந்து யுஸ்ரானும் அவரது பழைய பள்ளி நண்பர்களும் வாக்குமூலங்களைத் திரட்டி வருகிறார்கள் என்பதை அபா கண்டுபிடித்திருந்தார்.
இஸ்லாமிய உறைவிடப் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் அத்துமீறல், இந்தோனேசியாவின் தேசிய பெண்களுக்கு எதிரான வன்முறை ஆணையத்தால் தேசிய அவசரநிலையாக வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் தங்களது குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுமாறு வலுக்கட்டாயமாக சம்மதிக்க வைக்கப்படுவதாலும், அமைதியாக இருக்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுவதாலும் பல வழக்குகள் நீதிமன்றத்தை எட்டுவதில்லை என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
இப்போது யுஸ்ரோனிடம் தொலைபேசியில் பேசி, சரியாக அதே வகையான கோரிக்கையைதான் அபா விடுத்துக்கொண்டிருந்தார்.
“உன் ஆசிரியரின் அவமானத்தை மறைத்துவிடு. எல்லோரும் தவறு செய்கிறார்கள், மகனே,” என்று அவர் அழுதபடி கெஞ்சினார்.
ஆனால், யுஸ்ரோன் தனது ஒவ்வொரு வார்த்தையையும் பதிவு செய்துகொண்டிருப்பது அவருக்குத் தெரியவில்லை.
ஒரு வருடத்துக்கு முன்பு, தனது முன்னாள் வகுப்புத் தோழி ஸியாததுர் ரஹ்மா ஒரு நாள் இரவு தெரிவித்த தகவலைத் தொடர்ந்து அபா குறித்து யுஸ்ரோன் விசாரிக்கத் தொடங்கினார்.
இருவரும் லொம்போக்கில் உள்ள அபு பரோகத் பள்ளியின் சிறந்த மாணவர்களாக இருந்தனர். இந்த தருணத்தில் அவர்கள் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர். யுஸ்ரோன் தலைநகர் ஜகார்த்தாவிலும், ஸியாததுர் எகிப்தின் கெய்ரோவிலும் இருந்தார். பள்ளியில் கழித்த நாட்களைப் பற்றி இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தனர்.
ஒரு நாள் இரவு, நண்பர்களால் சியா என்று அழைக்கப்படும் ஸியாததுர், தனக்கு 16 வயதாக இருந்தபோது அபா தன்னைப் பாலியல் ரீதியாகத் தாக்கியதாக யுஸ்ரோனிடம் கூறினார்.
வகுப்பின் போது கழிப்பறைக்குச் செல்ல வேண்டியிருந்த அவரை, பள்ளித் தோட்டத்தில் அபா தடுத்து நிறுத்தினார். பின்னர், பள்ளி வளாகத்திலேயே இருந்த தனது வீட்டுக்கு தன்னுடன் வருமாறு அவர் கூறியதாக சியா தெரிவித்தார்.
வீட்டுக்குள் சென்றதும், தான் சியாவைக் காதலிப்பதாக அபா கூறியுள்ளார்.
“அவர் என்னை இழுத்து தனது மடியில் உட்கார வைத்தார்… பிறகு என்னை முத்தமிடத் தொடங்கினார்… என் உடலைத் தடவவும் தொடவும் செய்தார்,” என்று பின்னர் பிபிசி உலக சேவைக்கு அளித்த பேட்டியிலும் சியா தெரிவித்தார். தானும் அவருக்கு அதேபோல் செய்ய வேண்டும் என்று அபா கூறியதாக சியா விவரித்தார்.
அப்போது அபாவின் குழந்தைகளில் ஒருவர் பூட்டப்பட்டிருந்த முன்கதவைத் தட்டத் தொடங்கியது சியாவுக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது. அபா வெளியேறுமாறு சைகை செய்ததும், சியா பின்வாசல் வழியாக ஓடிவிட்டார். ஆனால், அந்தச் சம்பவம் அவரை ஆழமாகப் பாதித்தது.
“நான் மிகவும் அழுக்காகவும் சீரழிந்துவிட்டதாகவும் உணர்ந்தேன். என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்தேன்.”
சியாவின் அனுபவத்தைக் கேட்ட யுஸ்ரோனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர்களது பள்ளி அவர்களுக்கு: “சாமிஅனா வ அத்தாஅனா” (“நாங்கள் கேட்கிறோம், நாங்கள் கீழ்ப்படிகிறோம்”) என்ற தாரக மந்திரத்தைப் புகட்டியிருந்தது.
பட மூலாதாரம், Yusron Azzahidi
ஆனால், சியாவுக்கு நேர்ந்ததை அவரால் மனதில் இருந்து அகற்ற முடியவில்லை.
எனவே, சியாவும் அவரது பள்ளித் தோழிகளான வாண்டா ஹமிதா மற்றும் மஹிமா ஏகாவும் இணைந்து, அவரது வாக்குமூலத்தை உறுதிப்படுத்தும் ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டும் என்ற யோசனையை யுஸ்ரோன் முன்வைத்தார்.
அவர்கள் பழைய வகுப்புத் தோழர்களிடம் பேசத் தொடங்கியபோது, மேலும் பல சம்பவங்கள் குறித்த நினைவுகள் மெல்லமெல்ல வெளிவந்தன. தாங்கள் சேகரித்த தகவல்களை நண்பர்கள் வாட்ஸ்அப் மூலம் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டனர்.
வாண்டாவின் தோழி ஒருவர் தெரிவித்த தகவல் இதில் மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவர்கள் பள்ளியின் இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் இரவு நேரத்தில் பள்ளிக் கழிவறையில் ஓர் இளம் மாணவி அழுதுகொண்டிருப்பதை அவர் பார்த்திருந்தார். அந்த மாணவியைத் தேடி அபாவும் அங்கு வந்திருந்தார். அவரது முகம் சிவந்திருந்ததுடன், மூச்சு வாங்கியபடியும் இருந்ததாக அந்தத் தோழி நினைவுகூர்ந்தார்.
அந்த மாணவியின் பெயர் சுக்மா ரோஹானா. அவர் இன்னும் அதே பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். தனக்கு நேர்ந்ததை சுக்மா பிபிசியிடம் தெரிவித்தார்.

சுக்மாவுக்கு 17 வயதாக இருந்தபோது, புத்தாண்டு பிரார்த்தனைக்காக தன்னுடன் வருமாறு அபா அழைத்ததாக தெரிவித்தார். அபாவின் வீட்டுக்குள் சென்றதும், அவர் தனது வாயைப் பொத்தி, கீழே படுக்குமாறு கூறியதாக சுக்மா கூறினார். பின்னர், இடுப்புக்குக் கீழ் இருந்த ஆடைகளைக் கழற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
” தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்று அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந் தார்,” என்கிறார் சுக்மா.
“எனது உள்ளாடையின் மேலாகவே அவர் என்னைத் தடவினார்… என்னைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.”
அப்போது சுக்மா தனது முழு பலத்தையும் திரட்டி அபாவின் வயிற்றில் பலமாக உதைத்தார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அங்கிருந்து தப்பி ஓடினார்.
அவர் ஓடிக்கொண்டே திரும்பிப் பார்த்தபோது, அபா தன்னைத் தேடி டார்ச் விளக்கை அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததாகக் கூறினார்.
இதைப் போன்ற ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கிடைக்கத் தொடங்கியபோது, யுஸ்ரோன் அவற்றை ஒருங்கிணைத்தார். குற்றச்சாட்டுகளை முன்வைத்த மாணவர்களிடம் தொலைபேசியில் மீண்டும் பேசி தகவல்களை உறுதிப்படுத்தியதுடன், மிகக் கவனமாகக் குறிப்புகளையும் பதிவு செய்தார்.
சுக்மா, சியா மற்றும் முன்னாள் மாணவர்கள் மேலும் நால்வருக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்களை விவரிக்கும் ஏழு பக்க ஆவணத்தையும் அவர் தயாரித்தார்.
தங்களது பள்ளியையும் மேலும் நூற்றுக்கணக்கான பள்ளிகளையும் நடத்தி வந்த சக்திவாய்ந்த அமைப்பான நஹ்த்லதுல் வத்தன் தினியாஹ் இஸ்லாமியாஹ்தின் (NWDI) பிரதிநிதிகளைச் சந்திக்க வாண்டா ஏற்பாடு செய்தார். கெய்ரோவில் படித்துக் கொண்டிருந்த சில மாணவர்களின் கல்விக்கும் அந்த அமைப்பு நிதியுதவி செய்து வந்தது.
அந்தச் சந்திப்பு நன்றாக நடந்ததாக நண்பர்கள் எங்களிடம் தெரிவித்தனர். இந்த வழக்கை காவல்துறையிடம் கொண்டு செல்ல தங்களுக்கு உதவுவதாக அந்த அமைப்பின் பிரதிநிதிகள் கூறியிருந்தனர்.
ஆனால், மூன்று வாரங்களுக்குப் பிறகு யுஸ்ரோனின் சகோதரி அனுப்பிய அந்த அச்சமூட்டும் குறுஞ்செய்தி அவருக்கு வந்தது. சகோதரியை யுஸ்ரோன் திரும்ப அழைத்தபோது அவரது குடும்ப வீட்டிலிருந்து அபா பேசிக்கொண்டிருந்தார். என்.டபிள்யூ.டி.ஐ., யுஸ்ரோன் தயாரித்திருந்த எழுத்துப்பூர்வ ஆவணங்களை அபாவிடம் கொடுத்துவிட்டது அப்போது தெளிவானது.
“இது ஊடகங்களில் கசிந்துவிட்டால்… நான் அழிந்துவிடுவேன்,” என்று யுஸ்ரோன் பதிவு செய்திருந்த உரையாடலில் அபா கூறுகிறார்.
தனக்காகப் பொய் சொல்லுமாறு யுஸ்ரோனிடம் அவர் கெஞ்சினார். தான் தயாரித்திருந்த ஆதார ஆவணத்தைத் திரும்பப் பெறுவதற்கு யுஸ்ரோன் என்னென்ன காரணங்களை பயன்படுத்தலாம் என்பதையும் அவர் சொல்லிக்கொடுத்தார்.
பின்னர் சியாவையும் அவர் தொலைபேசியில் அழைத்து இதேபோன்ற அழுத்தம் கொடுத்தார். யுஸ்ரோனைப் போலவே சியாவும் அந்த உரையாடலைப் பதிவு செய்தார். அதில், சியாவிடம் அத்துமீறலில் ஈடுபட்டதை அபா ஒப்புக்கொள்கிறார். ஆனால், அதைப் பற்றி அமைதியாக இருக்குமாறு அவரிடம் கெஞ்சுகிறார்.
பட மூலாதாரம், Abu Barokat Facebook
அபா வீட்டிற்கு அழைக்கப்பட்டபோது இரண்டு காவல் துறை அதிகாரிகளும் ஒரு என்.டபிள்யூ.டி.ஐ. வழக்கறிஞரும் தனக்காகக் காத்திருந்ததைக் கண்டதாக எங்களிடம் சுக்மா கூறினார். தான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று கூறும் ஓர் ஆவணத்தில் கையெழுத்திடுமாறு அவர்கள் தன்னை கட்டாயப்படுத்தியதாக அவர் கூறினார். பின்னர், அபாவின் மனைவி ஹுர்மியாதியிடம் இதுகுறித்து சுக்மா கேள்வி எழுப்பியபோது ரகசியமாகப் பதிவு செய்த உரையாடலும் அவரது கூற்றுக்கு ஆதாரமாக உள்ளது.
“எதுவும் நடக்கவில்லை” என்று இருவரும் செய்துகொண்ட “ஒப்பந்தத்தை” மதிக்குமாறு ஹுர்மியாதி அவரிடம் கூறுவதை அந்தப் பதிவில் கேட்க முடிகிறது. “இது உன் வாழ்நாள் முழுவதும் உன்னை துரத்த வேண்டும் என்று விரும்புகிறாயா? இது உனக்கு திருமணம் நடக்கும் வாய்ப்பையே பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறாயா?” என்றும் அவர் கேட்கிறார்.
இந்த அழுத்தம் யுஸ்ரோனின் பெற்றோரிடமும் சென்றடைந்தது. யுஸ்ரோனைத் தேடி ஜகார்த்தாவில் உள்ள பல்கலைக்கழகத்துக்குச் செல்லுமாறு அபா, யுஸ்ரோனின் பெற்றோரிடம் கேட்டிருந்தார். அவர்கள் யுஸ்ரோனைச் சந்திக்கவில்லை – அவர் ஒரு ஹோட்டலில் மறைந்திருந்தார். ஆனால், இந்தச் சம்பவம் யுஸ்ரோனின் தாயாருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. அந்த அழுத்தம் தன்னைக் கொன்றுவிடும் அளவுக்கு இருப்பதாக அவர் தனது மகனிடம் கூறினார்.
இதனால், யுஸ்ரோன் விருப்பமின்றி தனது புலனாய்வை நிறுத்தினார்.
இதற்கிடையில், அவரும் சியாவும் மெதுவாக ஒருவருக்கொருவர் நெருக்கமாகத் தொடங்கினர். அவர்களது நட்பு, தொலைதூரக் காதல் உறவாக மாறியது. இருவரும் தொடர்ந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தனர்.
“அவள் மிகவும் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடிந்தது… ‘(அபா) செய்ததைப் பற்றி நான் ஏன் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கிறேன்?’ என்று அவள் சொல்வாள்.”
யுஸ்ரோன் குழப்பத்தில் இருந்தார். தான் காதலிக்கத் தொடங்கியிருந்த அந்தப் பெண்ணுக்கு உதவுவதா அல்லது தனது தாயாருக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பதா என்று அவர் தவித்தார்.
எட்டு மாதங்களுக்குப் பிறகு, இஸ்லாமியப் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த ஒரு குழுவைப் பற்றி யுஸ்ரோன் கேள்விப்பட்டார். வேறொரு பள்ளியில் மோச் சுப்ச்சி அசல் த்சானி என்ற ஆசிரியரால் பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்ட தனது தோழிக்கு நீதி கிடைக்க உதவியிருந்த ஆயு மஸ்ரூரோ என்ற இளம் பெண் இந்த குழுவை தொடங்கியிருந்தார்.
இப்போது பாலியல் அத்துமீறல்கள் குறித்து மக்கள் வெளிப்படையாகப் பேச வேண்டும் என்று சமூக ஊடகங்களில் ஆயு தீவிரமாகப் பதிவிட்டு வந்தார்.
இந்தோனேசியாவில் பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்ட மாணவர்கள் தன்னைத் தொடர்புகொள்ளுமாறு இன்ஸ்டாகிராமில் அழைப்பு விடுக்க சியாவுக்கு இது ஊக்கமளித்தது.
அப்போது ஒரு புதிய தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. அபா தன்னிடம் கெஞ்சியிருந்த போதிலும், இனி இப்படிச் செய்யமாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருந்தபோதிலும், அவர் மீண்டும் ஒருவரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. சியா படித்த அதே பள்ளியில் படித்த ஒருவர் அவரைத் தொடர்புகொண்டு, தானும் அபாவால் பாலியல் ரீதியாக அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். சியாவிடமும் யுஸ்ரோனிடமும் அபா இனி இப்படிச் செய்யமாட்டேன் என்று உறுதியளித்த கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டது.
“(அபா) உண்மையில் மாறவே இல்லை என்பதை அது எனக்கு உணர்த்தியது… நிறுத்திவிடுவேன் என்று அவர் சொன்னதெல்லாம்… வெறும் பொய்தான்,” என்று சியா கூறினார்.
இறுதியில், தொடர்ந்து நீதியைத் தேடும் முயற்சியில் சியாவுக்கும் சுக்மாவுக்கும் உதவ வேண்டும் என்று யுஸ்ரோனின் பெற்றோர் சம்மதித்தனர்.
ஆனால், இந்த முறை நண்பர்கள் வேறு விதமாகச் செயல்பட முடிவு செய்தனர். அவர்கள் ஆயுவைத் தொடர்புகொண்டனர். “ஒரு வழக்கறிஞரைப் பெறுங்கள்” என ஆயு தெளிவாக கூறினார். பாலியல் அத்துமீறலில் இருந்து தப்பியவர்களுக்காக வழக்காடுவதில் அனுபவம் வாய்ந்த ஒரு வழக்கறிஞரை அவர் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினார். வழக்குத் தொடர்வதற்கு சுக்மாவின் புகார்தான் மிகவும் வலுவானது என்று அந்த வழக்கறிஞர் கூறினார்.
அபா மற்றும் ஹுர்மியாதி மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் அவர்களைத் தொடர்புகொண்டோம். அவர்கள் பதிலளிக்கவில்லை.
என்.டபிள்யூ.டி.ஐ. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தாங்கள் இன்னும் உள்மட்ட விசாரணை நடத்தி வருவதாகக் கூறியது. பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை மூடிமறைக்க ஒருபோதும் முயற்சி செய்யவில்லை என்றும் அந்த அமைப்பு மறுத்தது.
“தனிநபர்கள் செய்ததாகக் கூறப்படும் செயல்களால் அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது,” என்று அது கூறியது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் அபாவுக்கு எதிராக காவல்துறையில் சுக்மா புகார் அளித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை இன்னும் முன்வரவில்லை. அபா தொடர்ந்து தனது பதவியில் இருக்கிறார்.
“எனக்கு நடந்தது வேறு எந்த மாணவிக்கும் நடக்கக் கூடாது. எனக்கு நீதி வேண்டும்,” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
எனினும், இந்த புலனாய்வு சியாவையும் யுஸ்ரோனையும் மேலும் நெருக்கமாக்கியது. கடந்த பிப்ரவரியில், மூன்று ஆண்டுகளாக குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் மூலம் தொடர்பில் இருந்த பின்னர், சியாவுடன் இருக்க யுஸ்ரோன் கெய்ரோவுக்குச் செல்ல முடிவு செய்தார்.

“நான் மிகவும் சோர்ந்துபோயிருந்தேன். ஜகார்த்தாவில் நிலைமை மிகவும் கடுமையாக இருந்தது. ஏனெனில், முழு நேரமும் வழக்கைச் சமாளித்துக்கொண்டிருந்தேன். அதனால் சியாவைப் பார்த்தபோது… அது மருந்து கிடைத்தது போல இருந்தது,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும், அதனால் “விடாமல் பேசிக் கொண்டே இருந்ததாகவும்” சியா கூறினார்.
“அப்போதுதான் அவர் உண்மையிலேயே தீவிரமாக இருக்கிறார் என்று எனக்குத் தெரிந்தது. எனக்காக அவர் எகிப்து வரை வந்திருந்தார். நான் அவரை நம்புகிறேன். அதனால்தான் அவருடன் இருக்கிறேன்.”
அவர்களுக்கிடையேயான இந்த நம்பிக்கையின் ஒரு பகுதி நீதியைத் தேடும் இருவரின் பொதுவான போராட்டத்தின் மூலம் உருவானது. கடந்த மாதம் அந்த ஜோடி திருமணம் செய்துகொண்டது.
அவர்களது வழக்கறிஞர் ஜோகோ ஜுமாதி, மாணவர்களின் துணிவையும் அவர்கள் சேகரித்த ஆதாரங்களின் துல்லியத்தையும் கண்டு வியந்ததாகக் கூறுகிறார்.
அவர்கள் ரகசியமாகச் சேகரித்த பதிவுகள், அமைதியாக இருக்குமாறு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தை அந்த நேரத்திலேயே பதிவு செய்திருப்பதால், அவை மிகவும் மதிப்புமிக்கவை என்று அவர் கூறினார். “பல பாதிக்கப்பட்டவர்கள் இதில் குறிப்பிடப்படுகிறார்கள் – அந்த நபரே அதை ஒப்புக்கொள்கிறார். இவை முக்கியமான ஆதாரங்கள்,” என்று அவர் கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், மேற்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய உறைவிடப் பள்ளிகள் தொடர்பான 20 பாலியல் அத்துமீறல் வழக்குகளை ஜோகோவும் அவரது குழுவினரும் கையாண்டுள்ளனர். இது “பனிப்பாறையின் முனை மட்டுமே” என்று அவர் நம்புகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு