இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, சோபிதா துலிபாலா, கலையரசன், சபீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டுவம்’.
தற்காப்புக் கலைகளை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
அதிரடி ஆக்ஷனில் மிரட்டிய சோபிதா துலிபாலா
இப்படத்தில் நடிகை சோபிதா துலிபாலா ஆபத்தான சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல், மிகத் தீவிரமாக நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “இப்படத்தில் வரும் சண்டைக் காட்சிகளை நான் ஒரு பெரிய சவாலாக எடுத்துக் கொண்டேன்.
இதற்காகப் பாரம்பரிய உடற்பயிற்சிகள் மற்றும் தற்காப்புக் கலைகளில் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
ஒத்திகையின் போது, ஒவ்வொரு சண்டைக் காட்சியையும் நாங்களே நேரடியாக (டூப் இல்லாமல்) செய்வதை உறுதிப்படுத்திக் கொண்டோம். என்று கூறினார்.
நெகிழ்ந்து பாராட்டிய மாமனார் நாகார்ஜுனா
சோபிதா துலிபாலாவின் இந்த அசாத்திய உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பார்த்து வியந்த அவரது மாமனாரும், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமுமான நடிகர் நாகார்ஜூனா , தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மருமகளைப் பாராட்டி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “வாவ்… இந்த வேட்டுவம் படத்தின் கதைக்களம் மற்றும் அதை உருவாக்கப்பட்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சோபிதா, நீங்கள் இதற்காகப் பல மடங்கு கடுமையான உழைப்பைக் கொட்டியிருப்பது நன்றாகத் தெரிகிறது.
பார்ப்பதற்கு காட்சிகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கின்றன. இத்திரைப்படத்தைக் திரையில் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
தற்காப்புக் கலையை மையமாகக் கொண்டு பா.ரஞ்சித் இயக்கியுள்ள விதம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இப்படம் டிசம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளையில், தனது மருமகளின் கலைப் பயணத்திற்கும், அவரது முயற்சிக்கும் மாமனார் நாகார்ஜுனா மனதார வாழ்த்து தெரிவித்துள்ள இந்தச் செய்தி, தற்போது சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி வருகிறது.