• Tue. Jul 7th, 2026

24×7 Live News

Apdin News

திருச்சி: காரில் கடத்தப்பட்ட பெண்ணை இரண்டரை மணி நேரத்தில் காவல்துறை மீட்டது எப்படி?

Byadmin

Jul 7, 2026


அஜித்குமார் - சித்திரவள்ளி

பட மூலாதாரம், Ajithkumar

படக்குறிப்பு, அஜித்குமார் – சித்திரவள்ளி

“என் மனைவியை அவரின் வீட்டார் காரில் கடத்த முயன்றபோது நானும் என் அம்மாவும் எவ்வளவோ தடுக்க முயன்றோம். ஆனாலும் தடுக்க முடியவில்லை. என் மனைவியை வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளி வேகமாக காரை ஓட்டிச் சென்றுவிட்டனர்,” என்கிறார் அஜித்குமார்.

திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 4) நடந்த சம்பவம் இது. அஜித்குமாரின் மனைவி சித்திரவள்ளியை காரில் கடத்த முற்பட்டபோது அவரும் அவரது அம்மா விஜயலட்சுமியும் தடுக்க முயற்சிக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் ஞாயிற்றுக்கிழமை வைரலானது.

பட்டப்பகலில் நடந்த கடத்தல் சம்பவம் இந்த காணொளி மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. பட்டியல் பிரிவை சேர்ந்த அஜித்குமார் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சித்திரவள்ளியை அவருடைய பெற்றோரின் எதிர்ப்பை தாண்டி சமீபத்தில் தான் திருமணம் செய்த நிலையில் இச்சம்பவம் நடந்தது.

எனினும், கடத்தப்பட்ட சுமார் இரண்டரை மணிநேரத்தில் போலீஸார் அப்பெண் இருந்த இடத்தைக் கண்டுபிடித்து அவரை மீட்டு கணவர் அஜித்குமாருடன் மீண்டும் சேர்த்து வைத்தனர். இச்சம்பவத்தில் என்ன நடந்தது?

மணப்பாறை சித்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார். பட்டியல் பிரிவை சேர்ந்த இவர் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். இவரும் முடுக்குபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த சித்திரவள்ளி என்பவரும் இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சித்திரவள்ளி மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். மணப்பாறையில் சித்திரவள்ளி தன் சகோதரியின் பாத்திரக் கடையில் பணியாற்றி வந்தபோது இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.

By admin