0
காலை எழுந்த பிறகும் போதிய தூக்கம் இல்லாதது போன்ற உணர்வு ஏற்படுவது அல்லது பகலில் வேலைக்கு நடுவே கண்கள் தானாகச் சொருகுவது பலருக்கு அன்றாடப் பிரச்சினையாக இருக்கலாம். இதைச் சாதாரண சோம்பேறித்தனம் என்று பலர் கடந்து விடுகிறார்கள். ஆனால், அதிகப்படியான பகல் நேர தூக்கம் (Excessive Daytime Sleepiness – EDS) என்பது ஒரு தீவிரமான உடல்நல எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
ஏன் பகலில் தூக்கம் வருகிறது?
பகலில் அதீத தூக்கம் வருவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.
இரவில் தரமான தூக்கம் கிடைக்காததே இதற்கு முதன்மைக் காரணம். நீண்ட நேரம் மொபைல் அல்லது கணினித் திரையைப் பார்ப்பது உடலின் இயற்கை தூக்கச் சுழற்சியைப் பாதிக்கிறது.
மனஅழுத்தம், மாறி மாறி வேலை செய்யும் ஷிப்ட் முறைகள் மற்றும் அதிக கஃபைன் (Caffeine) உட்கொள்ளுதல் போன்றவை தூக்கத்தைப் பாதிக்கின்றன.
தைராய்டு கோளாறு, நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் சில மருந்துகளின் பக்கவிளைவுகள் காரணமாகவும் தூக்கம் வரலாம்.
தூக்கத்தின் போது சுவாசம் தடைபடும் ‘ஸ்லீப் அப்னியா’ (Sleep Apnea) போன்ற கோளாறுகள் பகல் நேர தூக்கத்தைத் தூண்டுகின்றன.
சாதாரண சோர்வுக்கும் அதிக தூக்கத்துக்கும் உள்ள வித்தியாசம்
சோர்வாக இருக்கும் ஒருவருக்கு ஆற்றல் குறைவாக இருக்கலாம். ஆனால், அவர்களால் விழித்திருக்க முடியும். ஆனால், அதீத தூக்கப் பாதிப்பு உள்ளவர்கள், கூட்டங்கள், உரையாடல்கள் அல்லது வாகனம் ஓட்டும் போது கூடத் தங்களையும் அறியாமல் தூங்கிவிடும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
உடலில் ஏற்படும் மாற்றங்கள்
தூக்கம் என்பது வெறும் ஓய்வு மட்டுமல்ல, அது உடலில் பல முக்கியமான பணிகளைச் செய்கிறது:
பகல் முழுவதும் மூளையில் சேரும் ‘அடினோசின்’ என்ற வேதிப்பொருள் தூக்கத் தேவையை உருவாக்குகிறது. சூரியன் மறைந்த பின் சுரக்கும் ‘மெலட்டோனின்’ ஹார்மோன் உடலைத் தூக்கத்திற்குத் தயார்படுத்துகிறது.
தூக்கத்தின் போது செயல்படும் ‘கிளிம்பாட்டிக் அமைப்பு’ (Glymphatic system) மூளையில் தேங்கும் தீங்கு விளைவிக்கும் புரதங்களை அகற்றுகிறது.
ரத்த அழுத்தம் மற்றும் ரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைப்பதில் தூக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அலட்சியப்படுத்தினால் ஏற்படும் ஆபத்துகள்
தொடர்ந்து போதிய தூக்கம் இல்லாதது விழிப்புணர்வு மற்றும் நினைவாற்றலைக் குறைக்கும். இது முடிவெடுக்கும் திறனைப் பாதிப்பதோடு, வீதி விபத்துகளின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. நீண்டகால அடிப்படையில், இது உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களுக்கு வழிவகுக்கலாம்.
சிறந்த தூக்கத்திற்கான எளிய வழிமுறைகள்
தரமான தூக்கத்தைப் பெற மருத்துவர்கள் பின்வரும் ஆலோசனைகளை வழங்குகின்றனர்:
தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
காலை நேரத்தில் சிறிது நேரம் சூரிய ஒளியில் இருப்பது தூக்கச் சுழற்சியை ஒழுங்குபடுத்தும்.
பிற்பகல் 3 மணிக்குப் பிறகு காபி குடிப்பதைத் தவிர்க்கவும்.
தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே மொபைல் மற்றும் கணினித் திரைகளை அணைத்துவிட வேண்டும்.
அறையை இருட்டாகவும், குளிர்ச்சியாகவும் வைத்திருப்பது விரைவாகத் தூங்க உதவும்.
மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?
போதுமான அளவு தூங்கிய பிறகும் பகலில் தொடர்ந்து கட்டுப்படுத்த முடியாத தூக்கம் ஏற்பட்டால் அல்லது அது உங்கள் அன்றாட வாழ்க்கையைப் பாதித்தால், உடனடியாக ஒரு நரம்பியல் நிபுணரை அணுகுவது அவசியம். முறையான மருத்துவ ஆலோசனையின்றி சுயமாகச் சிகிச்சை மேற்கொள்வது ஆபத்தானது.
தூக்கம் என்பது உடலைப் புத்துணர்வடையச் செய்யும் ஒரு மீளுருவாக்கச் செயல்முறை. அதைச் சரியாகப் பேணுவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது.