9
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ்வுக்கு சட்ட ரீதியிலான தேவைகளை மேற்கொள்ள யாருடனும் இணைந்து செயற்பட நாங்கள் தயாராக இருக்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமை (6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் அனைத்து இன, மத கட்சிகளையும் ஐக்கியப்படுத்திக்கொண்டு செல்லும் கட்சியாகும். அதன் பிரகாரம் ஐக்கிய தேசிய கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழாவின் ஆரம்ப நிகழ்வுக்கு அனைத்து இனத்தவர்கள் மற்றும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தோம்.
அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஒன்றாக பயணிக்க முடியும். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. உரிய நேரம் காலம் வரும்போது அது இடம்பெறும். எங்களுக்குள் தற்போதும் நல்ல உறவு இருந்து வருகிறது. அதனாலே எமது அழைப்பை ஏற்று அவர்கள் இந்த நிகழ்வுக்கு வந்தார்கள்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ்வை பார்வையிட நான் சிறைச்சாலைக்கு செல்லவில்லை. ரணில் விக்ரமசிங்க சிறையில் அடைத்து வைக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் நான் அவரை பார்க்க சிறைச்சாலைக்கு செல்லவில்லை. ஏனெனில் அவர்கள் சிறையில் இருக்கும்போது, அதன் தாக்கம் அவர்களுக்கே உணர முடியுகிறது. வெளியில் இருக்கும் எங்களுக்கு அல்ல. ஆனால் அது தொடர்பான தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள யாருடனும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறோம் என்றார்.
இங்கு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழாவுக்கு எமது கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் கட்சியின் செயலாளருடன் இங்கு வந்தோம்.
அதேநேரம் நாமல் ராஜபக்ஷ்வுக்கு முறைப்பாடு ஒன்று இருக்கிறது. நல்லாட்சி அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே இந்த விசாரணை இடம்பெறுகிறது. அதனால் நீதிமன்ற விசாரணைகளில் என் நடக்கிறது என்பதை பார்ப்போம். எதிர்க்கட்சினருக்கு எதிராக தெரிவிக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி பொறுப்பு கூறவேண்டும் என்றில்லை. சட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை என்றார்.