நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (05) மதிய வேளையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, சிறைச்சாலை வளாகத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
மோதலைத் தொடர்ந்து, பெண் கைதிகள் குழுவொன்று சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை, ஆண் கைதிகள் குழுவொன்றும் சற்று முன்னர் சிறைச்சாலையின் கூரையில் ஏறி தங்களது போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய மோதலில் காயமடைந்த 35 கைதிகள் இதுவரை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்களில் 10 பேருக்கு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனைய காயமடைந்த கைதிகள் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவலை ஒருவர் வெளிப்படுத்திய சம்பவமே இந்த மோதலுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
The post நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம் | 2 கைதிகள் உயிரிழப்பு | 30-க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Vanakkam London.