18
இங்கிலாந்தின் ஷெஃபீல்டில் வீடொன்றில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பச்சிளம் பெண் குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வின்கோபேங்க் பகுதியில் உள்ள ஹோலிவெல் ஹைட்ஸ் பகுதியில் அமைந்துள்ள குறித்த வீட்டில், ஞாயிற்றுக்கிழமை காலை குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டது. குழந்தையின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
19 மற்றும் 38 வயதுடைய இரண்டு ஆண்கள், 20 மற்றும் 37 வயதுடைய இரண்டு பெண்கள் என நான்கு பேர் மீது கொலை, குழந்தையின் மரணத்தை ஏற்படுத்துதல் அல்லது அதனை அனுமதித்தல் மற்றும் குழந்தையின் கொலையை மறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நீதிச் செயல்முறையைத் திசைதிருப்புதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக South Yorkshire பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், 15 வயதுடைய சிறுமி ஒருவரும் நீதிச் செயல்முறையைத் திசைதிருப்பிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டக் காரணங்களால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
கைது செய்யப்பட்ட ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பின்னர் Sheffield Magistrates’ Court நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
“இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் எங்கள் சமூகங்கள் ஆழமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை நான் அறிவேன். இந்த சிக்கலான விசாரணையை முன்னெடுத்து வரும் நிலையில் எங்களுக்கு ஆதரவளிக்கும் சமூகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று விசாரணை தொடர்பாக பேசிய துப்பறியும் தலைமை ஆய்வாளர் Tom Woodward கூறினார்.
மேலும், “இந்த வழக்கு தொடர்பாக ஊகங்களை வெளியிடுவதையும் இணையத்தில் தகவல்களைப் பதிவிடுவதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், குற்றவியல் நீதிச் செயல்முறையின் நேர்மையைப் பாதுகாப்பது, இந்தச் சிறுமிக்கான நீதியை உறுதி செய்வதற்கு எங்களுக்கு மிகவும் முக்கியமானது,” எனவும் அவர் தெரிவித்தார்.