• Sat. May 9th, 2026

24×7 Live News

Apdin News

பனைவளம் எமது அடையாளம், வாழ்வாதாரம் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

Byadmin

May 9, 2026


பனை மரம் வெறும் தாவரம் மட்டுமல்ல. அது எமது தமிழ் சமூகத்தின் அடையாளமும் வாழ்வாதாரமும் ஆகும். கற்பகத்தரு என்று போற்றப்படும் இந்தப் பனை மரத்தின் ஒவ்வொரு பாகமும் மனிதனுக்கு பயன் தரக்கூடியது. எமது முன்னோர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருந்த பனை வளம் இன்றைய நவீன உலகில் மீண்டும் ஒரு எழுச்சியை பெற்று வருவது வரவேற்கத்தக்கது என பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

கொழும்பு தமிழ்ச் சங்கம் மற்றும் பனை அபிவிருத்தி சபை இணைந்து ஏற்பாடு செய்துள்ள “தமிழர் பண்பாடும் பனைவளமும் 2026″ கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வை  பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (08) வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்த போதே இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

பொருளாதார மேம்பாடு பனை சார் உற்பத்திகள் உலக அளவில் கவனம் பெற்று வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், பனை வெல்லம், கருப்பட்டி, பனை நாரினால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் போன்றவை இயற்கை சார்ந்த வாழ்வியலுக்கு ஒரு சிறந்த மாற்றாக அமைந்துள்ளன. எமது அமைச்சின் ஊடாகவும் பனை அபிவிருத்திச் சபையின் ஊடாகவும் பனை சார் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றார்.

உற்பத்தியாளர்களுக்கு பாராட்டு நிகழ்வில் சான்றிதழ் பெற்ற பனை சார் உற்பத்தியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதி அமைச்சர், “உங்களின் உழைப்பும் கலைத்திறனுமே எமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறது” எனப் பாராட்டினார்.

இக்கண்காட்சியை ஏற்பாடு செய்த கொழும்பு தமிழ்ச் சங்கத்திற்கும் பனை அபிவிருத்திச் சபைக்கும் நன்றி தெரிவித்த அவர், கண்காட்சிக்கு வருகை தரும் மக்கள் எமது பாரம்பரிய பொருட்களை ஆதரிப்பதன் மூலம் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இக்கண்காட்சி மற்றும் விற்பனையானது இன்று (08) வெள்ளிக்கிழமையும் நாளை (09) சனிக்கிழமையும் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வெள்ளவத்தை தமிழ்ச்சங்க  சங்கரப்பிள்ளை மண்டபத்தில்  நடைபெற உள்ளது.

இந் நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இளங்குமரன், வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா , மட்டு  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு , கொழும்பு மாவட்ட அமைப்பாளர் சிவானந்த ராஜா, பனை அபிவிருத்தி சபையின் தலைவர் ஆர் இரவீந்திரன், ஸ்ரீ விஜேந்திரன் , காண்டீபன்  கொழும்பு மாநகர சபை உறுப்பினர் திருச்செல்வம், தமிழ் சங்கத்தின் செயலாளர், வர்த்தகர்கள் பொதுமக்கள் அமைச்சின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

The post பனைவளம் எமது அடையாளம், வாழ்வாதாரம் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் appeared first on Vanakkam London.

By admin