படக்குறிப்பு, மண்டகப்படி ஒதுக்குவதில் இருதரப்பினர் இடையே பிரச்னைகட்டுரை தகவல்
எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
பதவி, பிபிசி தமிழுக்காக
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை, வளவம்பட்டி, மூங்கில் அய்யனார் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. கடந்த 17ஆம் தேதி காப்புக்கட்டி கோயில் திருவிழா தொடங்கியது.
இதில் மண்டகப்படி ஒதுக்குவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை எழுந்ததால், ஒரு தரப்பு நீதிமன்றத்தை நாடி ஒன்பதாம் நாள் மண்டகப்படியில் காலை 8.30 மணியில் இருந்து பகல் 1 மணி வரை ஆதிதிராவிட மக்கள் மண்டகப்படி நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.
நீதிமன்ற அனுமதியின்படி 24ஆம் தேதி திருவிழாவில் சாமி புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் அனுமதி வாங்கிய தரப்பினர், புதுக்கோட்டை – தஞ்சாவூர் சாலையில் மறியல் செய்தனர்.
இதனால் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உற்சவரின் சிலையை எடுத்துச் செல்ல முற்பட, தர்ணா போராட்டம் நடந்தது. இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலால் அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர்.
கிராமத்தில் சாதிய தீண்டாமை இருக்கிறதா?
தங்கள் கிராமத்தில் இன்றளவும், தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாகக் கூறுகிறார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த, ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த சுந்தர்ராஜன். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், தங்கள் ஊரில் ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்த 50 குடும்பத்தினரும் ஆதி திராவிடர் அல்லாத சமுதாயங்களைச் சேர்ந்த குடும்பத்தாரும் வசித்து வருவதாகக் கூறினார்.
அவரது கூற்றுப்படி, அந்த கிராமத்தில் உள்ள மூங்கில் அய்யனார் கோயில் பாலாலயம் செய்யும்போது இடித்துவிட்டுப் புதிதாகக் கட்ட திட்டமிட்டிருப்பது அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் “அனைத்து சமுதாய மக்களிடமும் வரி வசூல் செய்து கோயில் புனரமைக்கப்பட்டது. அந்தப் பணிகள் முடிந்து, 2025 மார்ச் 3ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது.”
குடமுழுக்கு விழாவுக்குப் பிறகு நடக்கும் 48 நாள் மண்டல பூஜை மண்டகப்படியில் ஆதி திராவிடர்களுக்கு ஒரு மண்டகப்படியை ஒதுக்க வேண்டுமென மக்கள் கேட்டுள்ளனர். ஆனால் அதைப் பிற சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் கொடுக்க மறுத்ததால் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும் தீர்வு எட்டப்படாததால் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பின்னர், “அனுமதி கிடைக்காததால் நாங்கள் நீதிமன்றத்தை நாடி ஒன்பதாவது நாள் மண்டகப்படியில் 8.30 மணியில் இருந்து பகல் 1 மணி வரை ஆதி திராவிட மக்கள் மண்டகப்படி கொண்டாட அனுமதி பெற்றிருந்தோம். அதன் அடிப்படையில் ஒன்பதாவது நாள் மண்டகப்படி கடந்த ஜூலை 25 நடைபெற்றது.”
“கடந்த சனிக்கிழமை காலை 9:50க்கு புதிதாகக் கட்டப்பட்ட மூங்கில் அய்யனார் கோயிலுக்குச் சென்றபோது அங்கிருந்து 200 மீட்டர் தூரத்தில் இருக்கும் தனியாருக்குச் சொந்தமான உற்சவர் மண்டபத்தில் சாமி இருப்பதாகக் கூறினார்கள்” என்கிறார் சுந்தர்ராஜன்.
பட மூலாதாரம், HANDOUT
படக்குறிப்பு, தங்கள் கிராமத்தில் இன்றளவும், தீண்டாமை இருந்து வருவதாகக் கூறுகிறார் சுந்தர்ராஜன்
அப்பகுதியில், ஆண்டுதோறும் திருவிழாக் காலத்தில் சுவாமி உற்சவ மண்டபத்திற்குச் செல்வது வழக்கம். ஆனால், “அந்த உற்சவர் மண்டபம் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த தனியாருக்குச் சொந்தமானது என்பதால் நாங்கள் கோயிலில் நீண்ட நேரம் காத்திருந்தோம். சுமார் 11:30 மணியளவில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நேரில் வந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உற்சவர் மண்டபத்திற்கு வருமாறு அழைத்தனர்” என்றார் சுந்தர்ராஜன்.
அங்கு சென்றபோதும் மாற்று சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களை முதலில் அனுமதிக்க மறுத்ததாகவும், பிறகு சாமி கும்பிட அனுமதித்தபோது நாங்கள் சாமியை தூக்கி சப்பரத்தில் ஏற்ற முயன்றபோது சாமியை தொட்டுத் தூக்கக்கூடாது, தூக்கினால் பிரச்னையாகும் என்றும் ஆதிதிராவிடர் அல்லாத மக்கள் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறிய அவர், “நாங்கள் நீதிமன்ற ஆணையை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கேட்டோம். ஆனால் எதிர் தரப்பினர் சப்பரத்தைத் தூக்க அனுமதிக்கவில்லை. அறநிலையத் துறை அதிகாரிகளை சப்பரத்தை தூக்குமாறு கூறினோம். ஆனால் எதிர்த் தரப்பினர் சுவாமி கொலுவில் உள்ளதால் சப்பரம் தூக்க முடியாது என நிராகரித்தனர்” என்றார்.
அதுமட்டுமின்றி, ஆதி திராவிடர்கள் சாமியை தூக்கினால் “கோயிலை இழுத்து மூடிவிடுவோம்” எனக் கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. நேரம் ஒரு மணியை கடந்ததையடுத்து “இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆதி திராவிடர்களுக்கான மண்டகப்படி நேரம் முடிந்ததால் இனி அறநிலையத் துறை மண்டகப்படி நடக்கும் எனத் தெரிவித்தனர். அதை எதிர் தரப்பினர் ஏற்க மறுத்ததால் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.”
இதனால் நீதிமன்ற ஆணையை நடைமுறைப்படுத்த முடியாமல் ஆதி திராவிடர் மக்கள் மண்டகப்படி கொண்டாட முடியாமல் போனதாகவும், இனி வரும் காலத்தில் நீதிமன்ற ஆணைப்படி தங்களுக்குப் புதிதாகக் கட்டிய மூங்கில் அய்யனார் கோயிலில் மண்டகப்படி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சுந்தர்ராஜன் வலியுறுத்தினார்.
அதோடு, தங்கள் ஊரில் இன்றளவும் தீண்டாமை தொடர்ந்து கொண்டிருப்பதை இவ்வாறான பிரச்னைகள் மூலம் உணர முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Handout
‘அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்’
“ஆதி திராவிடர் மக்கள் கோயிலில் வழிபடுவதற்கும் தேர்த் திருவிழா நடந்த பிறகு அவர்கள் மண்டகப்படி நடத்தி கொள்ளவும் எந்தத் தடையும் இல்லை. நாங்கள் அவர்களை வரவேற்கிறோம், ஆனால் எங்களுக்குச் சொந்தமான மண்டகப்படி நேரத்தில் அவர்கள் மண்டகப்படி நடத்துவதை எதிர்ப்போம்,” என்று தனது தரப்பு நிலைப்பாட்டை விளக்கினார் சாதி இந்து சமுதாயத்தைச் சேர்ந்த கணேசன்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 2025 மார்ச் மாதம் கோயில் குடமுழுக்கு விழா நடந்து முடிந்த பிறகு 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்றது. அந்த மண்டல பூஜை நாட்களிலும் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் மண்டகப்படி கொண்டாடி வந்தனர். எங்கள் ஊரில் வசிக்கும் ஆதி திராவிட மக்கள் தங்களுக்கும் மண்டக்கப்படி ஒதுக்க வேண்டுமெனக் கேட்டனர். இதுவரை ஆதி திராவிடர்களுக்கு மண்டகப்படி ஒதுக்கப்பட்டதில்லை என்பதால் நாங்கள் அதை மறுத்தோம். அவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து திருவிழாவில் ஒன்பதாவது நாள் மண்டகப்படியின்போது காலை 8.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை ஆதி திராவிடர்கள் மண்டகப்படி செய்வதற்கான நீதிமன்ற ஆணையைப் பெற்று வந்தனர்” என்று கூறினார்.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான திருவிழா காப்பு கட்டி நடைபெற்று வந்த நிலையில் சனிக்கிழமை ஒன்பதாவது நாள் மண்டகப்படியில் பொது மக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு சாமியை சப்பரத்தில் வைத்து தூக்குவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது “ஆதிதிராவிட மக்கள் தங்களுக்கான மண்டகப்படி என்பதால் காலை 9:30 மணி அளவில் மூங்கில் அய்யனார் கோயிலுக்கு வந்தனர். ஆனால் திருவிழா நாட்களில் சாமி, 200 மீட்டர் தூரத்தில் உள்ள உற்சவர் மண்டபத்தில் கொலுவில் இருப்பதால் உற்சவர் மண்டபத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்” என்கிறார் கணேசன்.
ஆனால் அதை அவர்கள் ஏற்க மறுத்து தனியார் இடத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் தங்களுடைய மண்டகப்படியை செய்ய முடியாது என்றும் கோயிலுக்குள் வைத்துதான் செய்ய வேண்டும் எனவும் கூறி, சாமியை கோவிலுக்குள் எடுத்து வருமாறு வலியுறுத்தியதாக கணேசன் கூறுகிறார்.
“ஆனால் நாங்கள் அதை ஏற்கவில்லை. அதற்குள் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட நேரம் முடிவடைந்ததால் அறநிலையத் துறை அதிகாரிகள் தங்களுக்கான மண்டகப்படி வேலையை செய்யத் தொடங்கினர். ஆனால் அதை ஏற்க மறுத்த ஆதி திராவிடர் சமூக மக்கள் தங்களுக்கான உரிமை கிடைக்கவில்லை என்று கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும்” அவர் தெரிவித்தார்.
கணேசனின் கூற்றுப்படி, தேர்த் திருவிழா முடிந்த பிறகு ஆதி திராவிட மக்கள் பத்தாவது நாள் மண்டகப்படி செய்து கொள்ளுமாறு தங்கள் தரப்பில் கூறியபோதும், அவர்கள் ஏற்காததால் இரு பிரிவினரிடையே பிரச்னை பெரிதாக வளர்ந்தது.
“இந்த நிலையில் சாமியை சப்பரத்தில் இருந்து தூக்கி உற்சவ மண்டபத்திற்குள் எடுத்துச் சென்ற அறநிலையத் துறை அதிகாரிகள் மண்டபத்தை இரு தரப்பு சார்பில் இரண்டு பூட்டுகளைப் பயன்படுத்தி பூட்டிவிட்டனர். இதனால் தேர்த் திருவிழா உள்பட அனைத்தும் நிறுத்தப்பட்டன. அடுத்த ஆண்டு அனைவரது மண்டகப்படியும் நடைபெறும் எனக் கூறிய அறநிலையத் துறை அதிகாரிகள் கோயிலைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர்.”
ஆதி திராவிட மக்கள் கோயிலுக்குள் வந்து சாமி கும்பிடுவதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்ட கணேசன், “வரும் காலங்களில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மண்டகப்படி நடத்தட்டும் அல்லது பத்தாவது நாள் மண்டகப்படி செய்துகொள்ளலாம். எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இதுவரை எங்கள் ஊரில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் இருந்து வருகிறோம். சாதிப் பிரச்னை இதுவரை வந்ததில்லை,” என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
நின்றுபோன கோயில் திருவிழா
இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் சூரியாவிடம் கேட்டபோது, “ஒன்பதாம் நாள் மண்டகப்படி இந்து சமய அறநிலைத் துறைக்கு பாத்தியப்பட்டது என்பதால் அன்றைய தினம் 8:30 மணியில் இருந்து ஒரு மணி வரை நீதிமன்ற ஆணைப்படி ஆதி திராவிடர்கள் மண்டகப்படி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாக” தெரிவித்தார்.
ஆனால், “ஆதி திராவிட மக்கள் நேரடியாக உற்சவம் மண்டபத்திற்கு வராமல் புதிதாகக் கட்டப்பட்டு, குடமுழுக்கு செய்யப்பட்ட கோயிலில் நின்றுகொண்டு உற்சவ மண்டபம் தனியாருக்குச் சொந்தமானது என்பதால் தாங்கள் அங்கு வர விரும்பவில்லை என்றனர்” என்கிறார் சூரியா.
இதைத் தொடர்ந்து, உடனடியாக கிராம நிர்வாக அலுவலரை அழைத்துச் சென்று உற்சவ மண்டபம் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இருப்பதை உறுதி செய்ததாகவும் அதற்குப் பிறகே அவர்கள் உற்சவ மண்டபத்திற்கு வந்ததாகவும் சூர்யா குறிப்பிட்டார்.
அந்த நேரத்தில், “அவர்கள் கொண்டு வந்த பூ உள்ளிட்ட பொருட்களைக் கொடுத்து அவர்களது மண்டகப்படி தொடங்கியபோது இரு தரப்பு மக்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதன் விளைவாக, ஆதி திராவிடர் பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகளே சப்பரத்தை தூக்கி மண்டகப்படி செய்யுமாறு கேட்டனர். ஆனால், மற்றொரு தரப்பு அதை அனுமதிக்காததால் அறநிலையத் துறை சார்பாக சாமியை உற்சவ மண்டபத்திற்குள் வைத்து பூட்டியுள்ளோம்” என்று நடந்ததை விளக்கினார் சூரியா.
இந்த ஆண்டுக்கான திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் புதிய ஆணை பெறப்பட்டாலோ அல்லது தற்போதுள்ள ஆணையை நடைமுறைப்படுத்துமாறு கூறினாலும் வரும் ஆண்டில் திருவிழாவுக்கு அனைத்து மக்களையும் அழைத்து அனைவரிடமும் ஒத்துழைப்பு பெற்று திருவிழாவை நடத்த முடிவு செய்திருப்பதாக கோயிலின் செயல் அலுவலர் கூறினார்.
புதுக்கோட்டை காவல்துறையிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “இரு தரப்பினர் மீதும் இதுவரை எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் ஆறு மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை போலீசார் ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.
மேலும், கிராமம் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், “அடுத்த ஆண்டு திருவிழா ஏற்பாடுகள் தொடங்கும்போதே விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும்” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.