8
தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் வெள்ளிக்கிழமை (11) 21 ஆவது வாரமாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டத்தில், இராணுவத்தினரால் தமது பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றை இந்த மாதமாவது விடுவித்து தங்களை மீள்குடியேற்ற அரசாங்கமும் அரச அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் பல வாரங்களாக தொடர் கோரிக்கைகள், போராட்டங்களை முன்னெடுத்தும் தமது கோரிக்கைக்கு இதுவரை முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமது வாழ்வாதாரம், குடியிருப்பு மற்றும் எதிர்கால சந்ததியினரின் உரிமைகளுடன் தொடர்புடைய பூர்வீக நிலங்களை மீளப்பெறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
21 வாரங்களாக நீடித்து வரும் இந்தப் போராட்டத்திற்கு உரிய தீர்வை வழங்கி, மயிலிட்டி மக்களின் பூர்வீக காணிகளை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



