0
தாய்லாந்தில் பௌத்தத் துறவிகள் கலந்துகொண்டிருந்த ஊர்வலத்தில் கெப் வாகனம் ஒன்று புகுந்து மோதியதில் 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த கெப் வாகனத்தை 11 வயது சிறுவன் இயக்கியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் முக்டாஹான் மாநிலத்தில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில், 35 பௌத்தத் துறவிகளும் ஐந்து பக்தர்களும் இணைந்து ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த கெப் வாகனம் ஊர்வலத்திற்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஐந்து துறவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்த உடனே அவசர மருத்துவ உதவிக் குழுவினரும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், சம்பவத்தில் தொடர்புடைய 11 வயது சிறுவன் தனது பெற்றோரின் கெப் வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. வாகனத்தை செலுத்தும்போது அதன் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதனிடையே, விபத்துக்குள்ளான வாகனம் தடயவியல் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

