முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று திங்கட்கிழமை (18) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் இன அழிப்பின்போது உயிர் நீத்தவர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு முள்ளிவாய்க்காலில் காலை 10.10க்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்திய அதேவேளை பொதுச் சுடர் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து, கஞ்சி பரிமாறப்பட்டது.
இனப்படுகொலை இடம்பெற்றபோது ஏற்பட்ட கொடூரங்களை நேரடியாக பார்த்து, அங்கிருந்து தப்பி ஓடியவர்கள், அந்த நாட்களில் நடந்த படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான அனுபவங்களை நினைவேந்தல் வேளையில் பகிர்ந்துகொண்டனர்.
அத்துடன் தமிழ் தேசியத்துக்காக இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களை நினைவுகூரும் விதமாக தமிழ் மக்கள் ஒன்றுகூடி தமிழர்களுக்கு நடந்த துயரத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்து ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த நினைவேந்தலின்போது கேட்டுக்கொண்டனர்.
The post மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் appeared first on Vanakkam London.