• Tue. Aug 4th, 2026

24×7 Live News

Apdin News

மின்கட்டண திருத்தம் குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

Byadmin

Aug 4, 2026


2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எவ்வித திருத்தமும் செய்யத் தேவையில்லை என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மூன்றாம் காலாண்டின் மொத்த மின் விநியோகச் செலவிற்கும்,மொத்த வருமானத்திற்கும் இடையிலான வேறுபாடு ரூபா 417 மில்லியன் ரூபாவாகும். இந்நிலையைக் கருத்திற்கொண்டு, மூன்றாம் காலாண்டில் மின்சாரக் கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் இல்லை என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தேசிய முறைமை இயக்க நிறுவனத்தினால் மூன்றாம் காலாண்டிற்காக சமர்ப்பிக்கப்பட்ட விநியோகச் செலவு மதிப்பீடுகளை மதிப்பாய்வு செய்த பின்னரே ஆணைக்குழு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

கட்டண அறிவிடல் முறைமைக்கு அடைய, 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மின்சார விநியோகத்திற்கான செலவு அதிகரிப்பானது 0.3 சதவீதம் (ரூபா 417 மில்லியன்) ஆக மட்டுமே காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மூன்றாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் எதுவும் தேவையில்லை என்றும், இரண்டாம் காலாண்டில் நிலவிய அதே கட்டண முறையே இக்காலாண்டிலும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணக் கொள்கையின்படி, நடப்பு ஆண்டின் முதலாம் காலாண்டின் வருமான அல்லது பற்றாக்குறை மூன்றாம் காலாண்டின் மதிப்பீடு செய்யப்பட்ட செலவுகளுடன் சரிசெய்யப்பட வேண்டும். 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் ரூபா 30,118 மில்லியன் வருமானப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதில், நிலக்கரி நிலைமை காரணமாக முதலாம் காலாண்டில் மின் உற்பத்திக்காக செலவிடப்பட்ட மேலதிகச் செலவுகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.

நிலக்கரி நிலைமை காரணமாக ஏற்படும் மேலதிக மின் உற்பத்திச் செலவை மின்சாரக் கட்டணத்தில் சேர்க்கக்கூடாது என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னைய கட்டணத் திருத்தத்தின்போதே தீர்மானித்திருந்தது. அதற்கமைய, 2026 முதலாம் காலாண்டில் நிலக்கரி நிலைமை காரணமாக மேலதிகமாகச் செலவிடப்பட்ட ரூபா 3,366 மில்லியனை மின் உற்பத்திச் செலவிலிருந்து நீக்குவதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மூன்றாம் காலாண்டின் மொத்த மின் விநியோகச் செலவிற்கும் (ரூபா 186,027 மில்லியன்), மொத்த வருமானத்திற்கும் (ரூபா 185,610 மில்லியன்) இடையிலான வேறுபாடு ரூபா 417 மில்லியன் மட்டுமே ஆகும். இந்நிலையைக் கருத்திற்கொண்டு, மூன்றாம் காலாண்டில் மின்சாரக் கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டிய தேவை இல்லை என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

The post மின்கட்டண திருத்தம் குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு appeared first on Vanakkam London.

By admin