• Sun. Aug 16th, 2026

24×7 Live News

Apdin News

மீண்டும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 111 பேர் கைது

Byadmin

Aug 16, 2026


ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள வட ஆப்பிரிக்க பிராந்தியமான செவுட்டாவுக்குள் (Ceuta) சட்டவிரோதமாக நுழைய முயன்ற 111 பேரை மொராக்கோ பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் வாயிலாக மீண்டும் பெருமளவில் ஊடுருவ அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து எல்லையின் இருபுறமும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஜூலை 30 அன்று 72,000க்கும் மேற்பட்ட அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் செவுட்டா எல்லைக்குள் திடீரெனப் புகுந்தனர். அந்தப் பேரிடர் சம்பவத்தின் போது ஐரோப்பிய மண்ணை அடைய முயன்ற 96 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தற்போது இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் ஓர் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

மொராக்கோவின் எல்லை நகரமான புனைடெக் (Fnideq) பகுதியில் கைது செய்யப்பட்ட 111 பேரில், 109 பேர் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இருவர் மொராக்கோவைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எல்லையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள மலைப்பகுதிகளில் திரண்டிருந்தவர்களைக் கலைக்க மொராக்கோ பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

அதேவேளை, அப்பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஸ்பெயினின் பிரபல செய்தி நிறுவனங்களான EFE மற்றும் TVE ஆகியவற்றின் செய்தியாளர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு, மொராக்கோ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து செவுட்டாவில் ஸ்பெயின் இராணுவத்தினர் வணிக வளாகங்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருவதுடன், பொலிஸார் வீதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் அரசு மேலதிகமாக 500க்கும் மேற்பட்ட பொலிஸாரைக் களமிறக்கியுள்ளது. இதன்படி தற்போது செவுட்டாவில் 1,600க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

By admin