11
பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு இந்தியா இதுவரை நான்கு விமானங்கள் மூலம் 68.5 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் திகதி நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்ட நிலையில், அன்றைய தினமே இந்திய விமானப்படையின் சி-130ஜே ரக சரக்கு விமானம் மூலம் 10 தொன் நிவாரணப் பொருட்கள் நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கடந்த 27ஆம் திகதி இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் மூலம் மேலும் 37.5 தொன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
கடந்த 28ஆம் திகதி மீண்டும் சி-130ஜே ரக விமானம் மூலம் 10 தொன் நிவாரணப் பொருட்கள் நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதனையடுத்து, கடந்த 29ஆம் திகதி இந்திய விமானப்படையின் மற்றுமொரு சரக்கு விமானம் மூலம் 11 தொன் நிவாரணப் பொருட்கள் நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, நான்கு விமானப் பயணங்கள் மூலம் மொத்தம் 68.5 தொன் நிவாரணப் பொருட்களை இந்தியா நேபாளத்திற்கு வழங்கியுள்ளது.
இந்த நிவாரணப் பொருட்களில் போர்வைகள், தார்ப்பாலின் கூடாரங்கள் மற்றும் தூங்குவதற்கான சிறப்பு படுக்கைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பெருவெள்ளம் காரணமாக நேபாளம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட பிரதான பாலங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்தை மீள ஏற்படுத்துவதற்காக தற்காலிகப் பாலங்களை அமைக்க இந்தியாவின் உதவியை நேபாள அரசாங்கம் கோரியுள்ளது.
இதற்கமைய, முதல்கட்டமாக தற்காலிக இரும்புப் பாலங்களை அமைப்பதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்கள் 16 லாரிகளில் நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குவதுடன், சேதமடைந்த உட்கட்டமைப்புகளை மீளமைப்பதற்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.