கடந்த 24 மணிநேரத்தில் மொராக்கோவில் இருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செயுட்டாவுக்குள் சுமார் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
வியாழக்கிழமையன்று ஆயிரக்கணக்கானோர் நீந்தி நகருக்குள் நுழைவதைக் காட்டும் காணொளிகளும் படங்களும் வெளியாகின. இரவிலும் இவ்வாறு மக்கள் ஊடுருவியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய நாட்களில் இந்தப் பகுதிக்கு வர முயன்றபோது குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
செயுட்டா அல்லது ஸ்பெயினின் மற்றொரு வட ஆப்பிரிக்க பகுதியான மெலிலாவை அடைய முயன்றபோது கடலில் தடுத்து நிறுத்தப்படும் புலம்பெயர்ந்தோரை உடனடியாக மொராக்கோவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்று ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் இந்த மாதம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
ஸ்பெயின் அதிகாரிகளின் இந்த மதிப்பீட்டின்படி, கடந்த ஒரு நாளில் செயுட்டாவுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, சுமார் 83,600 மக்கள் வசிக்கும் அந்த நகரத்தின் மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமாக இருக்கலாம்.
கடந்த 24 மணிநேரத்தில் சட்டவிரோதமாக அப்பகுதிக்குள் நுழைந்தவர்களில் குறைந்தது 7,000 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
செயுட்டா மற்றும் மெலிலாவில் பாதுகாப்பை வலுப்படுத்த ஸ்பெயின் தற்போது தனது ஆயுதப் படைகளை நிலைநிறுத்தியுள்ளது. அங்கு ஒரே இரவில் 300 முதல் 400 பேர் வரை எல்லையைக் கடந்ததுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை செயுட்டாவுக்கு வருகை தந்தபோது பேசிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், எல்லை தாண்டி வருவதைக் கண்டித்ததோடு, இது ஸ்பெயினின் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல் என்றும் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
அத்துடன், மொராக்கோவுடனான எல்லையை வலுப்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் சான்செஸ் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை குற்றவியல் குழுக்கள் திரித்ததே இந்த அபாயகரமான நிகழ்வுகளுக்குக் காரணம் என்று பிரதமர் குற்றம் சாட்டினார். மேலும், தவறான தகவல்கள் “சமீபத்திய மணிநேரங்களில் காட்டுத்தீ போலப் பரவியுள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டார்.
சட்டவிரோதமாக நுழைந்தவர்களைத் திருப்பி அனுப்பும் திட்டங்களுக்கு மொராக்கோ அதிகாரிகள் ஒத்துழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
செயுட்டா மற்றும் மெலிலாவின் ஸ்பானிய வரலாறு 15ஆம் நூற்றாண்டு வரை நீள்கிறது. மேலும், அவை 1995 முதல் வரையறுக்கப்பட்ட தன்னாட்சியை அனுபவித்து வருகின்றன.
மொராக்கோவால் பெரிதும் விரும்பப்படும் இந்த நகரங்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜ்ஜீய உறவுகளில் நீண்ட காலமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நகரங்கள் ஆப்பிரிக்கா உடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே நில எல்லைகளை உருவாக்குகின்றன.
பட மூலாதாரம், EPA/Shutterstock
படக்குறிப்பு, இளைஞர்கள் பலரும் நீந்தியோ அல்லது நில எல்லைகளைக் கடந்தோ செயுட்டாவுக்குள் வந்துள்ளனர்
வழக்கமாக, செயுட்டாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்ந்தோர் கடற்கரையின் தொலைதூரப் பகுதியில் இருந்து பல கிலோமீட்டர் நீந்தியே வருவார்கள். ஆனால் இந்த முறை, அவர்கள் எல்லை வேலிக்கு மிக அருகிலேயே எளிதாக வந்து சேர்ந்ததாகத் தெரிகிறது. ஆரம்பத்தில், சிலர் துறைமுகக் கட்டமைப்புப் பாதையில் உள்ள பாறைகள் வழியாகவும், அதன் முனைப் பகுதி வரையிலும் நடந்து சென்றனர். ஆனால் பெரும்பாலானோர் மறுபுறம் உள்ள கடற்கரைகளை அடைய நீந்தியே செல்ல வேண்டியிருந்தது.
இந்த நேரத்தில் மொராக்கோ நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் எங்கே இருந்தார்கள் என்பதோ அல்லது புலம்பெயர்ந்தோர் குழுக்கள் ஏன் கலைக்கப்படவோ, தடுக்கப்படவோ இல்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை.
புலம்பெயர்ந்தோரில் ஒருவர், தான் மொராக்கோவுக்கே திரும்பிச் செல்வதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
மேலும் அவர், “இது கொஞ்சம்கூட நல்ல விஷயமல்ல, இதில் எந்த மகிழ்ச்சியும் இல்லை. சொல்லப்போனால், இங்கே மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், இன்னும் இங்கு வராதவர்கள், தயவுசெய்து வராதீர்கள். இப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபடாதீர்கள்” என்று தெரிவித்தார்.
வியாழக்கிழமை முதல் செயுட்டா நகரின் தெருக்களில் நிலவும் குழப்பமான சூழல் குறித்து உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் அச்சத்தில் இருப்பதாக அப்பகுதிவாசி ஒருவர் ஸ்பெயினின் ‘ஏபிசி’ ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
“தெருவில் யாரும் நடமாடுவதில்லை. அவர்கள் பயத்தில் இருக்கிறார்கள். முன்பு நாங்கள் எதிர்கொண்டதைவிட இது மிகவும் தீவிரமானதாக, ஆக்ரோஷமானதாக இருக்கிறது,” என்று மருத்துவமனைப் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் அந்த ஸ்பானிஷ் ஊடகத்திடம் கூறினார்.
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் செயுட்டா பகுதிக்குள் நுழைந்தனர்
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, செயுட்டா நகருக்குள் மிகப்பெரிய அளவிலான புலம்பெயர்ந்தோர் நுழைந்துள்ளனர்.
இதற்கு முன் புலம்பெயர்ந்தோர் வருகை இவ்வளவு பெரிய அளவில் நடக்கவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது 2021ஆம் ஆண்டில்தான் நடந்தது. அப்போது, மேற்கு சஹாராவின் இறையாண்மை விவகாரத்தில் ஸ்பெயினுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சுமார் 8,000 பேர் எல்லையைக் கடக்க மொராக்கோ அதிகாரிகள் அனுமதித்திருந்தனர்.
அந்தப் பிராந்தியத்தின் சுதந்திரத்தை ஆதரிக்கும் விதமாக ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் அல்ஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, அந்த ராஜ்ஜீய மோதல் சமீபத்தில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இத்தாலியின் வலதுசாரி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, செயுட்டாவில் நடந்த நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்தபோது, அங்கிருந்து வரும் புகைப்படங்கள் “அதிர்ச்சியளிப்பவையாக இருப்பதாக” அவர் குறிப்பிட்டார். மேலும், இத்தகைய “கட்டுப்பாடற்ற குடியேற்றம்” ஐரோப்பாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் அவர் தனது சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சுதந்திரமான நடமாட்டம் தொடர்பான ஸ்பெயினுடனான ஷெங்கன் மண்டல ஒப்பந்தத்தை இடைநிறுத்துவது குறித்து இத்தாலி பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார். இருப்பினும், இரு நாடுகளும் அண்டை நாடுகள் அல்ல என்பதாலும், ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோர் விமானங்களில் ஏறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதாலும், நடைமுறையில் அதன் அர்த்தம் இன்னமும் தெளிவாகத் இல்லை.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, மொராக்கோ, ஸ்பெயின் எல்லை
பின்னர் இத்தாலியின் வெளியுறவு அமைச்சகம், ஸ்பெயினை ஒப்பந்தத்தில் இருந்து முழுமையாக விலக்குவதற்குப் பதிலாக, இத்தாலி-ஸ்பெயின் எல்லையில் ஸ்பெயினுடனான ஷெங்கன் ஒப்பந்தத்தை இடைநிறுத்துமாறு கோரியதாகத் தெளிவுபடுத்தியது.
எப்படியிருந்தாலும், செயுட்டாவுக்கு வந்துள்ள புலம்பெயர்ந்தோர் இப்போது ஸ்பெயின் பெருநிலப்பரப்பில் அல்லாமல், அங்கேயே சிக்கியுள்ளனர்.
ஒரு நட்புறவு மற்றும் கூட்டாளி நாட்டுக்கு இந்தக் கருத்துகள் பொருத்தமற்றவை என்று ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் கூறினார். பிளவுபடுத்தும் அரசியல் தாக்குதல்களுக்குப் பதிலாக, அவர்களிடம் இருந்து ஐரோப்பிய ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் ஸ்பெயின் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அவர் வெள்ளிக்கிழமை மாட்ரிட்டில் உள்ள இத்தாலிய தூதரை வரவழைத்தார்.
செயுட்டாவில் இருந்து வெளிவரும் படங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் கூறிய ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், அவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரினார்.
இதற்கிடையில், ஐரோப்பிய தலைவர்கள் ஸ்பெயினின் எல்லைப் பாதுகாப்பை விமர்சித்தனர், பின்லாந்தின் உள்துறை அமைச்சர் மாரி ரன்டனென், மெலோனியின் முன்மொழிவை ஆதரித்த நிலையில், ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், சட்டவிரோத குடியேறிகளை உடனடியாக மொராக்கோ திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனக் கோரினார். இந்தப் பதற்றம், முற்றிலும் திறந்த உள் எல்லைகளுடன் செயல்படும் 29 ஐரோப்பிய நாடுகளின் வலையமைப்பான ஷெங்கன் பகுதியை நேரடியாகப் பாதிக்கிறது.