5
கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்தில், ஒரு பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நிலையில் ஸ்காட்லாந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 18 அன்று, ஏதென்ஸின் கிப்செலி (Kypseli) மாவட்டத்தில் உள்ள கைவிடப்பட்ட கட்டடம் ஒன்றில் வீடற்ற நபர் ஒருவரால் இந்தப் பெட்டி கண்டறியப்பட்டது.
உயிரிழந்தவர் எடின்பர்க்கைச் சேர்ந்த 38 வயதான எலிசபெத்-ஜேன் ரோஸ் (Elisabeth-Jane Ross) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சடலமாகக் கண்டறியப்படுவதற்கு 5 முதல் 7 நாட்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
எலிசபெத், கடந்த மாதம் சைப்ரஸிலிருந்து கிரீஸுக்கு வந்துள்ளார். அவர் காணாமல் போவதற்கு முன்பு ஏதென்ஸில் உள்ள தனது நண்பர் ஒருவருடன் தங்கியிருந்துள்ளார். அதிர்ச்சியூட்டும் விடயமாக, அவர் உயிரிழந்த பிறகும் அவரது கையடக்கத் தொலைபேசி யாரோ ஒருவரால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகளையும் அவரது நண்பர்களையும் திசைதிருப்புவதற்காக மர்ம நபர்கள் அவரது கையடக்கத் தொலைபேசியில் இருந்து குறுஞ்செய்திகளை அனுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எலிசபெத் எப்போது, எப்படி, யாருடன் கிரீஸுக்கு வந்தார் என்பது போன்ற கூடுதல் விவரங்களைக் கிரேக்கக் பொலிஸ், இங்கிலாந்து அதிகாரிகளிடம் கோரியுள்ளது. மரணத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய மருத்துவப் பரிசோதனை முடிவுகளுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
தற்போது ஸ்காட்லாந்து பொலிஸார், கிரேக்க அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்குத் தேவையான தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.