19
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்த உலகத் தலைவர்கள் Paris நகரில் ஒன்றுகூட உள்ளனர். இந்த உயர்மட்ட கூட்டத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டமார் (Keir Starmer) இணைந்து தலைமை தாங்கவுள்ளனர்.
சுமார் 40 நாடுகள் மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்புகள் பங்கேற்கும் இந்தச் சந்திப்பு, அமெரிக்கா–ஈரான் இடையேயான போர் நிறுத்தத்திற்கு ஆதரவு அளிப்பதோடு, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்யும் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
இந்த சந்திப்பில், நீரிணையை எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக மீண்டும் திறப்பது “உலகளாவிய பொறுப்பு” என கெய்ர் ஸ்டமார் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடல் வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தை பாதுகாக்கும் பன்னாட்டு முயற்சிகளுக்கும் உறுதியளிக்கப்பட உள்ளது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்காற்றும் ஹோர்முஸ் நீரிணை, தற்போது ஈரானால் முடக்கப்பட்டுள்ளதால், சர்வதேச வர்த்தகத்துக்கும் எரிசக்தி விநியோகத்துக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை மீண்டும் திறக்க பல நாடுகள் ஒருங்கிணைந்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.