13
இங்கிலாந்து அரச குடும்பத்தின் முன்னாள் உறுப்பினரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் தொடர்பான சர்ச்சைக்குரிய தகவல்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே, பக்கிங்ஹாம் அரண்மனையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்ததாக புதிய நீதிமன்ற ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
சுமார் 30,000 மின்னஞ்சல்களைக் கொண்ட காப்பகம் 2020ஆம் ஆண்டு அரச குடும்பத்தின் மூத்த அதிகாரியான லார்ட் சேம்பர்லினிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த மின்னஞ்சல்களில், ஆண்ட்ரூ வர்த்தகத் தூதராகப் பணியாற்றிய காலத்தில் ரகசிய அரசாங்கத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைக்குரிய நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்னஞ்சல்கள் ஆண்ட்ரூவின் முன்னாள் வணிகத் தொடர்பாளர் ஒருவரிடமிருந்து பெறப்பட்டதாகவும், பின்னர் அவை தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் மற்றும் வழக்குகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2021 ஏப்ரல் மற்றும் 2022ஆம் ஆண்டு ஜூன் காலப்பகுதியில் வெளியிடப்பட்ட உயர் நீதிமன்ற ஆவணங்களில், குறித்த மின்னஞ்சல் காப்பகத்தின் நகல் 2020 மே மாதத்திலேயே லார்ட் சேம்பர்லினிடம் வழங்கப்பட்டிருந்தது என்பதும், அதன் பின்னர் அவை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அனுப்பப்பட்டிருந்தது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு ஊடகங்கள் கேட்டபோது, பக்கிங்ஹாம் அரண்மனை பதிலளிக்க மறுத்துள்ளது. “மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் தொடர்பாக பொலிஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், தற்போது எந்தவிதமான கருத்தையும் வெளியிட முடியாது” என அரண்மனை தரப்பு தெரிவித்துள்ளது.