7
இங்கிலாந்தில் நிலவும் கடுமையான வெப்பநிலைக்கு மத்தியில், பல்வேறு நீர்நிலைகளில் குளித்த மூன்று சிறுவர்கள் தனித்தனி சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். மேற்கு யார்க்ஷயர், தெற்கு யார்க்ஷயர் மற்றும் வார்விக்ஷயர் ஆகிய இடங்களில் இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.
திங்கட்கிழமை மதியம், லீட்பீட்டர் அணைப்பகுதியில் (Leadbeater Dam) ரிகோ டேவிட்-ஜேம்ஸ் என்ற 13 வயது சிறுவன் நீரில் சிக்கி உயிரிழந்தார்.
கிங்ஸ்பரி நீர் பூங்காவில் (Kingsbury Water Park) உள்ள டேம் ஆற்றில் (River Tame) குளிக்கச் சென்ற 16 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி பலியானார். அவருக்கு நீச்சல் தெரியாது என்றும், அவரைக் காப்பாற்ற மற்றொரு சிறுவன் முயன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோதர் பள்ளத்தாக்கு நாட்டுப்புற பூங்காவில் (Rother Valley Country Park) உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற மற்றொரு சிறுவன் காணாமல் போன நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை அவரது உடல் மீட்கப்பட்டது.
அதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று லிங்கன் (Lincoln) பகுதியில் டெக்லான் சாயர் என்ற 15 வயது சிறுவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்தார்.
தொடர்புடைய செய்தி – லிங்கன் ஏரியில் காணாமல் போன 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு
மேலும், கார்ன்வால் பகுதியில் தனது உறவினர்களைக் காப்பாற்ற முயன்ற 60 வயது முதியவர் ஒருவரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
தற்போது இங்கிலாந்தில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக மக்கள் நீர்நிலைகளை நோக்கிச் செல்கின்றனர். இருப்பினும், காற்று வெப்பமாக இருந்தாலும் நீரின் வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கும் என்று ராயல் லைஃப் சேவிங் சொசைட்டி (RLSS) எச்சரித்துள்ளது. இதனால் ஏற்படும் “கோல்ட் வாட்டர் ஷாக்” (Cold water shock) காரணமாக நீச்சல் வீரர்கள்கூட ஆபத்தில் சிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நீர்நிலைகளில் உள்ள ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாராவது தண்ணீரில் ஆபத்தில் இருப்பதைக் கண்டால், நீங்களே தண்ணீரில் இறங்காமல் உடனடியாக 999 என்ற எண்ணை அழைக்கவும் மற்றும் மிதக்கக்கூடிய பொருட்களை வீசி அவர்களுக்கு உதவவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.