• Mon. Jun 29th, 2026

24×7 Live News

Apdin News

இங்கிலாந்து வெப்ப அலை சோகம்: நீரில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்வு

Byadmin

Jun 28, 2026


இங்கிலாந்தில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலையின் தாக்கத்தால் திறந்தவெளி நீர்நிலைகளில் குளிக்கச் சென்றவர்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த துயர சம்பவங்களில் மூன்று பதின்ம வயதினரும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக மக்கள் பலரும் குளிர்ச்சியை நாடி ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் போன்ற திறந்தவெளி நீர்நிலைகளுக்கு அதிகளவில் சென்று வருகின்றனர். ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத இடங்களில் கவனக்குறைவாக நீராடுவதால் உயிரிழப்புகள் தொடர்ந்து பதிவாகி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஷ்ரூஸ்பரி பகுதியில் அமைந்துள்ள செவர்ன் நதியில் இருந்து 22 வயது இளைஞன் ஒருவரின் உடல் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 15 வயதுடைய சிறுவன் ஒருவர், 69 வயதுடைய முதியவர் மற்றும் 50 வயதுடைய மற்றொருவரின் உடல்களும் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

வெப்ப அலையின் தீவிரம் காரணமாக திடீரென நீர்நிலைகளில் இறங்கும் மக்கள், அங்குள்ள நீரின் ஆழம், நீரோட்டத்தின் வேகம் மற்றும் மறைந்திருக்கும் அபாயங்கள் குறித்து அறியாமல் செயற்படுவதே இத்தகைய துயரச் சம்பவங்களுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

உயிரிழப்புகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அவசரகால மீட்புக் குழுவினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறிப்பாக பாதுகாப்பு வசதிகள் இல்லாத ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் நீராடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அதிகாரப்பூர்வமாக பாதுகாப்பு கண்காணிப்பு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே நீராட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கடுமையான வெப்பநிலை நிலவினாலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது உயிர் பாதுகாப்புக்கு மிகவும் அவசியம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

By admin