• Sun. Sep 20th, 2026

24×7 Live News

Apdin News

இலண்டனில் இளைஞன் படுகொலை: புகலிடக் கோரிக்கையாளருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Byadmin

Sep 20, 2026


இலண்டன் நகரில் 26 வயதுடைய பர்மானுல்லா ஷெர்சாத் என்ற இளைஞனைக் கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில், 18 வயதுடைய ஆப்கானிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளரான சுலைமான் தஜாயிக்கு இலண்டன் ஓல்ட் பெய்லி நீதிமன்றம் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர், அபே ஆர்சர்ட் வீதியிலுள்ள தனது வீட்டுக்குப் பணி முடிந்து திரும்பிய பர்மானுல்லா ஷெர்சாத்தை, அங்கு மறைந்திருந்த சுலைமான் தஜாயி 10 தடவைகளுக்கு மேல் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார்.

படுகாயமடைந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸாரும் மருத்துவக் குழுவினரும் உறுதிப்படுத்தினர்.

லீட்ஸ் பகுதியில் வசித்து வந்த தஜாயி, அங்குள்ள கடையொன்றில் சமையலறை கத்தியை வாங்கிக்கொண்டு, சுமார் 150 மைல் தூரம் ரயிலில் பயணித்து இலண்டனை அடைந்துள்ளார். முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து, பர்மானுல்லாவின் வீட்டின் அருகில் காத்திருந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளார்.

குடும்பப் பகை மற்றும் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே முன்கூட்டியே திட்டமிட்டு இக்கொலை அரங்கேற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் பின்னர் மீண்டும் லீட்ஸ் நகருக்குத் தப்பிச் சென்ற சுலைமான் தஜாயியை சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிபதி அஞ்சலா ராபர்ட்டி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

By admin