கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான அரசு வேலை வழங்கும் அரசாணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
இந்த நியமனங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 16ஆவது பிரிவுகளுக்கு நேரடியாக முரணானவை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், “இந்தச் சம்பவத்திற்காக கருணை அடிப்படையிலான நியமனங்கள் வழங்கப்பட்டால், இதுபோன்ற பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களும் இதேபோன்ற வேலைவாய்ப்பை கோரி முன்வர வழிவகுக்கும்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அரசு இத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்கும் போது, நிர்வாக அதிகாரத்தின் பயன்பாடு அரசியலமைப்புச் சட்ட வரம்புகளுக்குள் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“நிர்வாக நடவடிக்கைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் முழு சுதந்திரம் வழங்கப்பட்டால், குழப்பமே நிலவும்,” என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், “அரசுப் பணியிடங்கள் மாநில அரசால் எளிதில் வழங்கப்பட வேண்டியவை அல்ல. அவை தகுதியின் அடிப்படையில் பெறப்பட வேண்டியவை. அவற்றின் மதிப்பும் முக்கியத்துவமும் உணரப்பட வேண்டும். வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பலர் உள்ளனர்,” என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் (கோப்புப் படம்)
2025 செப்டம்பர் 27 அன்று, கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜயின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.
கடந்த ஜூலை மாதம் கரூருக்கு சென்ற தவெக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையிலான அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.