0
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை சார்ந்த பிரச்சினைகள் காரணமாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தீவிர அழுத்தம் கொடுத்து வருகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கல்வி அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படும் வரை, நாடாளுமன்றப் பேச்சுவார்த்தையிலோ அல்லது விவாதத்திலோ எதிர்க்கட்சிகள் பங்கேற்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வினாத்தாள் கசிவு குறித்து பேச முயன்றபோது தனது மைக் அணைக்கப்பட்டதாகவும், தனக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாணவர்களின் சார்பில் ராகுல் காந்தி பின்வரும் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்:
ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.
மத்திய அரசு தரப்பில் இக்கோரிக்கை தொடர்பாகத் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது குறித்து இறுதி முடிவெடுக்க சனிக்கிழமை வரை கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறிய போதிலும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பாராளுமன்றும் ஒருநாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பிரதமர் மோடி தனது மூன்றாவது பதவிக்காலத்தில் இவ்வாறானதொரு கடும் அரசியல் நெருக்கடியை முதன்முறையாக எதிர்கொண்டுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.