10
தமிழக சட்டப் பேரவையின் அலுவல்கள் நேரலை செய்யப்படுவது தொடர்பாக சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதியும், ஆளுங்கட்சியினரும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை தலைவர் விளக்கம் அளித்து பல பேச்சுக்களை அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், முதல்வர் தன்னுடைய மேசையில் மூன்று கோப்புகள் இருப்பதாக திமுக அரசை குற்றம் சாட்டும் வகையில் பேசினார். அதை அவர் பார்க்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள்? ஜோசியக்காரர் சொன்னால்தான் முதல்வர் பார்ப்பாரா? அந்த மூன்று கோப்புகள் மீது ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசுவது போல் எல்லாம் சட்டப்பேரவையில் பேசினால் சரி வராது” என்றார்.
உடனே ஆளுங்கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு திமுக உறுப்பினர்களும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள்.
இது தொடர்பாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் விளக்கம் அளித்தார்கள்.
இந்நிலையில் சட்டப் பேரவை தலைவர், ” முதல்வர் பேசியதை, ‘சினிமாவில் பேசியது போல பஞ்ச் டயலாக்’ என்று சொன்னால்.. எப்படி ஆளுங்கட்சியினர் எதிர்க்காமல் இருப்பார்கள்’ என குறிப்பிட்டபோது,
மீண்டும் உதயநிதி எழுந்து, ‘கோப்புகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்கட்டும். இந்த உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்’ என பதிலளித்தார்.
இதைத் தொடர்ந்து, ‘சினிமா போல பஞ்ச் டயலாக்’ என்ற வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக பேரவை தலைவர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், ” சட்டப் பேரவையில் நாங்கள் பேசியவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டீர்கள். ஆனால் இவை அனைத்தும் நேரலையில் சென்றுவிட்டது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? சட்டப் பேரவை அலுவல்களின் நேரலையை நாங்கள் எதிர்க்கவில்லை. அது ஒரு நல்ல முயற்சி. அதனை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் அவைக்குறிப்பில் இருந்து நீங்கள் நீக்கியவையெல்லாம்… சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது’ என்றார்.
இதற்கு பதிலளித்த பேரவை தலைவர் ஜே சி டி பிரபாகர், ” குற்றச்சாட்டுகளை எந்தப் பக்கம் இருந்து வைத்தாலும் ஆதாரபூர்வமான கருத்துக்களை சொல்வதன் மூலமாகவே அவையின் குறைந்தபட்ச மாண்பை நாம் காப்பாற்ற முடியும். அதேவேளையில் ஆதாரமற்ற கருத்துகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டியது என்பது இந்த அவையின் மரபு.
இனி வருங்காலத்திலும் அவை குறிப்பில் இருந்து நீக்குவது என்பது எனது தனிப்பட்ட உரிமை. ஏனெனில் அவையின் மாண்பை காப்பாற்றியாக வேண்டும்.
எல்லா பேச்சுகளையும் நீக்குவது என்பது எனது நோக்கம் அல்ல. இருப்பினும் அவைக்கு பயன் தராத, நம் பண்பாட்டுக்கு உதவாத, அவையின் மாண்பை குறைக்கக்கூடிய, எந்த விடயமாக இருந்தாலும் அவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவேன்” என்றார்.