பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி (நாளை) காலை 8 மணிமுதல் எண்ணப்பட உள்ளன.
நான்கு மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் போட்டி எந்த கட்சிகளுக்கு இடையே நிலவியது என்பதை சுருக்கமாக முதலில் அறியலாம்.
தமிழ்நாடு
தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்றது.
பிராந்தியக் கட்சிகள் தலைமையிலான இரண்டு முக்கிய கூட்டணிகள் களத்தில் உள்ளன. ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக).
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி மூலம் முதன்முதலாகத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.
மேலும், சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது.
சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம், ராமதாஸ் மற்றும் இதர அமைப்புகளுடன் இணைந்து கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி 120 தொகுதிகளில் போட்டியிட்டது.
மேற்குவங்கம்:
294 இடங்களுக்கான மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இந்தப் போட்டி பெரும்பாலும், நான்காவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயலும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றுக்கு இடையே நிலவுகிறது.
அசாமின் 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்றது.
இந்தப்போட்டி இரண்டு கூட்டணிகளுக்கு இடையே நிலவுகிறது, ஒன்று ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலானது மற்றும் மற்றொன்று காங்கிரஸ் தலைமையிலானது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயல்கிறது.
பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 27 இடங்களில் தனித்துப் போட்டியிட்டது.
கேரளாவின் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்றது.
இந்தப் போட்டி முதன்மையாக இரண்டு முக்கிய கூட்டணிகளுக்கு இடையே நிலவுகிறது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்). தற்போது ஆட்சியில் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயல்கிறது.
புதுச்சேரி:
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்றது.
இரண்டு முக்கிய கூட்டணிகள் இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்துகின்றன: ஒன்று தற்போது ஆட்சியில் இருக்கும் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியுடன் (பாஜக) இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி. மற்றொன்று காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, இதில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அங்கம் வகிக்கிறது. தவெக கூட்டணி 30 இடங்களில் களம் கண்டது.