2
இலங்கை – பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையில் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று (31) நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இமேஷா துலானி குவித்த ஆட்டம் இழக்காத கன்னி சதத்தின் உதவியுடன் இலங்கை 6 விக்கெட்களால் வெற்றீயீட்டியது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 177 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி ஒரு ஓவர் மீதம் இருக்க 4 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இமேஷா துலானி மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணித் தலைவி சமரி அத்தபத்துவுடன் 42 பந்துகளில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தார்.
சமரி அத்தபத்து 32 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்ததுடன் 3 விக்கெட்கள் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.
எனினும் இமேஷா துலானி, கவிஷா டில்ஹாரி (11) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர்.
தொடர்ந்து இலங்கையின் வெற்றிக்கு தேவைப்பட்ட எஞ்சிய 10 ஓட்டங்களை துலானி, நிலக்ஷிகா சில்வா (9 ஆ.இ.) ஆகிய இருவரும் பெற்றுக்கொடுத்தனர்.
இமேஷா துலானி 64 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 101 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.


அணித் தலைவி முனீபா அலி, ஷவால் ஸுல்பிகார் ஆகிய இருவரும் 39 பந்துகளில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தொடர்ந்து ஷவால் ஸுல்பிகார், ஈமான் நசீர் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் மேலும் 61 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அதன் பின்னர் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இணைப்பாட்டங்கள் அமையவில்லை.
ஷவால் ஸுல்பிகார் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 63 ஓட்டங்களையும் முனீபா அலி 42 ஓட்டங்களையும் ஈமான் நசீர் 21 ஓட்டங்களையும் ஆயிஷா ஸபார் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகி: இமேஷா துலானி.

