• Sun. Sep 20th, 2026

24×7 Live News

Apdin News

தெலங்கானாவில் பெண்ணை தாக்கி தலைமுடியை பிடித்து இழுத்த ஊர்க்காவல் படை வீரர் கைது – என்ன நடந்தது?

Byadmin

Sep 20, 2026


அந்தப் பெண்ணைத் தாக்கிய நபர், ரயில்வே பாதுகாப்பு படை காவலரான கடிகா ஆனந்த் என்று போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார் (ஸ்க்ரீன்ஷாட்)

பட மூலாதாரம், UGC

    • எழுதியவர், அமரேந்திர யார்லகடா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தெலங்கானாவில் ஊர்க்காவல் படையை சேர்ந்த ஒருவர், ஒரு பெண்ணை மோசமாகத் தாக்கி, அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று கீழே தள்ளும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்தச் சம்பவம் செப்டம்பர் 18-ஆம் தேதி இரவில், தெலங்கானாவின் ஹைதராபாத்தில் அமைந்துள்ள மியாபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஹஃபிஸ்பேட் ரயில் நிலையம் அருகே நடந்துள்ளதாக சைபராபாத் காவல்துறை கண்டறிந்துள்ளது.

மியாபூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயராம், செப்டம்பர் 19 அன்று குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

என்ன நடந்தது?

மியாபூர் காவல் ஆய்வாளர் ஜெயராம் இந்தச் சம்பவத்தின் விவரங்களை பிபிசியிடம் விளக்கினார். அவர் வழங்கிய தகவலின்படி, வெள்ளிக்கிழமை இரவு ஹஃபிஸ்பேட் ரயில் நிலையத்தின் நடைமேடைகளில் சிலர் பழைய காகிதங்கள் மற்றும் இரும்புக் கழிவுகளைச் சேகரித்துக் கொண்டிருப்பதை நிலைய மேலாளர் கவனித்தார். அவர்களை அங்கிருந்து அனுப்பி வைக்குமாறு ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு நிலைய மேலாளர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு படையின் ஊர்க்காவல் படையை சேர்ந்த ஆனந்த் என்பவர் அவர்களை அங்கிருந்து அனுப்ப முயன்றபோது, ஒரு பெண் அவரைத் திட்டியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக காவல் ஆய்வாளர் ஜெயராம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த், அந்தப் பெண்ணை கண்மூடித்தனமாகத் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

By admin