நீட் தருதி மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு 4-ந்தேதி தொடங்கி நடைபெறும் என்று மத்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.
72,627 மாணவர்கள் விண்ணப்பம்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க tnmedicalselection.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த 23-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு 70 ஆயிரத்து 486 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மேலும் விண்ணப்பிக்க கடந்த 26-ந்தேதி காலை 10 மணி முதல் 27-ந்தேதி பிற்பகல் 3 மணி வரையில் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் 2,141 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த வகையில் மொத்தம் 72 ஆயிரத்து 637 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்று விண்ணப்பித்த மாணவர்களும், அவர்களது பெற் றோர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
முதற்கட்ட கலந்தாய்வு
இந்த நிலையில் நாடு முழுவதும், நீட் தகுதி மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான பட்டியலை மத்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்ட அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு வருகிற 4-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மாநில அளவிலான கலந்தாய்வு வருகிற 13-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 4 கட்ட கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் அக்டோபர் 10-ந்தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள 72 ஆயிரத்து 627 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தரவரிசை பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு கலந்தாய்வு அட்டவணையை மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.