0
இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer) தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார். லேபர் கட்சியின் தலைவராகவும் அவர் பதவி விலகுகிறார்.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு கட்சியை வழிநடத்த ஸ்டார்மர் சரியான நபர் இல்லை என்று லேபர் கட்சியினர் கருதுவதை அவர் ஏற்றுக்கொண்டார். நாட்டின் நலனை முன்னிறுத்தி, இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
10 டவுனிங் வீதிக்கு வெளியே தனது உரையை ஆற்றியபோது பிரதமர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். தனது மனைவி விக்டோரியா மற்றும் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த கணவராகவும், தந்தையாகவும் இருக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
லேபர் கட்சியின் புதிய தலைவருக்கான வேட்புமனுக்கள் ஜூலை 9 அன்று தொடங்கும். செப்டெம்பர் 1ஆம் திகதிக்குள் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை ஸ்டார்மர் பிரதமராக நீடிப்பார்.
அடுத்த பிரதமர் யார்?
மேக்கர்ஃபீல்ட் (Makerfield) தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham), ஸ்டார்மருக்குப் பிறகு பிரதமராக வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இலண்டன் மேயர் சாதிக் கான், ஸ்டார்மரை ஒரு நேர்மையான மனிதர் என்று பாராட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரான நைஜல் ஃபரேஜ், உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த அரசியல் மாற்றங்களால் பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு சந்தையில் சற்று சரிவைச் சந்தித்துள்ளது.
ஸ்டார்மர் தனது உரையில், தான் பொறுப்பேற்றபோது திவாலான நிலையில் இருந்த லேபர் கட்சியை மீட்டெடுத்ததாகவும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்திருப்பதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டார்.