11
பெத்தி- திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு: விருத்தி சினிமாஸ்
நடிகர்கள் : ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ் குமார், ரவி கிஷன், திவ்யேந்து சர்மா, ஜெகபதிபாபு, சுருதிஹாசன் மற்றும் பலர்.
இயக்கம்: புச்சி பாபு சனா
மதிப்பீடு: 3/ 5
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், பான் இந்திய நட்சத்திர பிரபலமுமான ராம் சரண் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் என்பதாலும்.. வெளியீட்டுக்கு முன் ரசிகர்களை சென்றடையச் செய்வதற்கான விளம்பர உத்தி உலகம் முழுவதும் விரிவாக மேற்கொள்ளப்பட்டதாலும்… ‘பெத்தி’ படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆர்வத்துடன் படமாளிகைக்குள் சென்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு ….என்ன ஆனது? என்பதை தொடர்ந்து காண்போம்.
இந்தியாவின் பூர்வகுடியான பழங்குடியின மக்களாக இருந்தாலும்… இந்திய அரசாங்கத்தால் முறையாக அங்கீகரிக்கப்படாத தொலைதூர கிராமத்திற்கு புகையிரத நிலையம் மூலம் தனித்துவமான அடையாளத்தை பெறுவதற்காக போராடும் அந்த மண்ணின் மைந்தனான பெத்தி ( ராம் சரண்) எனும் இளைஞனின் போராட்டமும், அதற்காக அவர் கையாண்ட உத்தியும்… அதில் வென்ற கதையை விவரிப்பதும் தான் இப்படத்தின் கதை.
சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் மோசமான செயல்பாட்டிற்கு தீர்வு காணும் வகையில் இந்திய விளையாட்டு துறை அமைச்சகம்- எம்முடைய கிராமங்களில் உள்ள விளையாட்டு துறை சார்ந்த திறமையாளர்களை கண்டறியும் பணியை ஒரு விரிவான விவாதத்திற்குப் பிறகு தொடங்குகிறது. இதில் ஒரு பகுதியாக வைஸ்வால் ( பொமன் இரானி) எனும் விளையாட்டுத்துறை சார்ந்த அதிகாரி விஜய நகரம் வருகிறார். அங்கு தொலைதூர பழங்குடியின கிராமத்தை சேர்ந்த வெல்லம் தயாரிக்கும் தொழிலாளியும், விளையாட்டு வீரருமான பெத்தியை பற்றி அறிந்து கொள்கிறார்.
விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை சார்ந்த பகுதியில் பெயரிடப்படாத கிராமத்தை சேர்ந்த இளைஞன் பெத்தி- தின கூலி தொழிலாளியாக பணியாற்றுகிறார். ஆதிக்க சக்திகளால் அவர்களுக்கு வழங்கப்படும் கூலி பாதி மட்டுமே வழங்கப்படுகிறது. போக்குவரத்து வசதி இல்லாத அந்த கிராமத்திற்கு சாலை வசதிகளை செய்து தர வலியுறுத்தி அந்த ஊரில் உள்ள அப்பலசூரி ( ஜெகபதி பாபு) என்பவர் பல தசாப்தங்களாக போராடுகிறார். இந்நிலையில் பெத்தி- துடுப்பாட்ட வீரராக மிளிர்கிறார். தன்னை யார் அதிகமாக விலை கொடுத்து வாங்கி ஆதரவு தருகிறார்களோ…! அவரது அணிக்காக ஆடுகிறார். ஆனால் அந்தத் துடுப்பாட்ட போட்டியில் அவமானத்தை எதிர்கொள்கிறார். இதனால் ஆத்திரமடைந்து ஒப்பற்ற மல்யுத்த வீரர்களை உருவாக்கும் கௌர் நாயுடு ( சிவராஜ் குமார்) என்பவரை சந்தித்து மல்யுத்த பயிற்சியை மேற்கொள்கிறார். துடுப்பாட்ட வீரராக திகழ்ந்த பெத்தி மல்யுத்தத்திற்கு மாறியது ஏன் ? என்பதையும், அவருடைய வாழ்க்கையில் அச்சியம்மா – ராம் புஜ்ஜி- அப்பலசூரி – கௌர் நாயுடு – ரன்தீர் சிங் சிசோடியா- சுபத்ர ராஜு- பத்ரா – ஆகியோர் குறுக்கிட்டதால் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்களையும் திரைக்கதை அழகாக விவரிக்கிறது.
முதலில் பாராட்டுக்குரியவர் மெகா பவர் ஸ்டார் ராம் சரண். பழங்குடியின இளைஞன் -துடுப்பாட்ட வீரர்- மல்யுத்த வீரர் – மெய்நிகர் வீரர் – என எந்த கதாபாத்திரத்தில் பயணித்தாலும்… அதற்குரிய உடல் தோற்றத்தையும், உடற்கட்டையும் ஏற்படுத்தி கொண்டு… கதாபாத்திரத்தை உணர்ந்து, தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி… ரசிகர்களின் மனதில் ‘பான் இந்திய நட்சத்திரம்’ என்ற அந்தஸ்துடன் இடம்பிடிக்கிறார்.
இலக்கை அடைவதற்காக தேசப்பற்றுக்கு ஊற்றுக்கண்ணாக திகழும் விளையாட்டை… தன்னுடைய போராட்ட ஆயுதமாக பெத்தி பாவிப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும் அவரது கதாபாத்திரம்….கவனம் ஈர்க்கிறது.
விளையாட்டுத்துறை அதிகாரியை பழங்குடியின நபர் ஒருவர் காட்டு வழியாக அவரை அழைத்து வருவதும் இடையிடையே பெத்தியை பற்றி விவரிப்பதுமான திரைக்கதை ரசிகர்களை வசீகரித்திருக்கிறது.
அச்சியம்மாவாக திரையில் தோன்றும் நடிகை ஜான்வி கபூரின் கவர்ச்சியும், இளமையும் முன்வரிசை ரசிகர்களுக்கு போனஸ்.
எக்சன் காட்சிகளில் அதிரடி இருந்தாலும் அதில் அர்த்தமும் பொதிந்திருப்பதால்… உணர்வுபூர்வமாக ரசிக்க முடிகிறது.
உரையாடலிலும், கதாபாத்திரத்திற்கான எழுத்திலும் இயக்குநர் புச்சிபாபு சனாவின் ஆதிக்கமும், அழுத்தமும் அப்பட்டமாக தெரிகிறது. பாராட்டுகள்.
இசைப்புயலின் துள்ளலான பாடல்களும், மிரட்டலான பின்னணி இசையும் ரசிகர்களை தொடர்ந்து விசில் அடிக்க வைக்கிறது.
ரத்னவேலு காட்சிப்படுத்தி இருக்கும் ‘பெத்தி’யின் விசுவல் யுனிவர்ஸ் – ரசிகர்களை கண்கள் இமைக்க மறப்பதுடன் அகல விரித்து.. வியப்பில் ஆழ்த்துகிறது.
அஜித் நடிப்பில் வெளியான’ சிட்டிசன்’ படத்தின் சில விடயங்கள் நினைவிற்கு வந்து சென்றாலும்… ‘பெத்தி’ அதிலிருந்து தனித்துவமான அடையாளத்தை அதன் காட்சி அமைப்புகளாலும்.. திரைக்கதையாலும் .. நேர்த்தியான கதாபாத்திர வடிவமைப்பாலும் பெறுகிறது.
பெத்தி- தங்கக்கோப்பை