• Fri. Sep 18th, 2026

24×7 Live News

Apdin News

மலேசியாவில் பயிலும் தமிழக மாணவருக்கு அரசு உதவித்தொகை கிடைப்பதில் என்ன சிக்கல்? குற்றச்சாட்டும் அரசு பதிலும்

Byadmin

Sep 18, 2026


தமிழக அரசின் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம், மலேசியா,  ஆராய்ச்சிப்படிப்பு

பட மூலாதாரம், BBC Tamil

படக்குறிப்பு, ஆராய்ச்சிப்படிப்பு மாணவர் பாரதிதாசன்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தமிழக அரசின் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப்படிப்பு (பிஎச்.டி) படித்து வரும் பாரதிதாசன் என்ற மாணவர், தன்னுடைய இரண்டாம் ஆண்டு படிப்புக்கான கல்வி உதவித்தொகையை அரசு விடுவிக்கவில்லை என்று குற்றம்சாட்டி காணொளி வெளியிட்டுள்ளார்.

ஆனால், அந்த மாணவர் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று தமிழக அரசின் சமூகநீதித்துறை குற்றம்சாட்டியது. அதை மீண்டும் மறுத்து காணொளி வெளியிட்ட பாரதிதாசன், அனைத்து ஆவணங்களையும் அரசிடம் சமர்ப்பித்துவிட்டதாகக் கூறினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் விவாதப்பொருளானது. அந்த மாணவனுக்கு அரசு உதவாவிடில் திமுக உதவும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில் அந்த மாணவருக்கு அனைத்து உதவித்தொகையும் 2 நாட்களில் வழங்கப்படுமென்று அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார். அவர் தாங்கள் கோரிய சில ஆவணங்களை அனுப்பாததே உதவித்தொகை அனுப்பப்படாமல் இருப்பதற்குக் காரணமென்று ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் செந்தில்ராஜ் பிபிசியிடம் கூறினார்.

இந்த விவகாரத்தில் நடந்த விஷயங்களை பிபிசியிடம் விளக்கிய மாணவர் பாரதிதாசன், அமைச்சர் கூறியபடி உதவித்தொகை கிடைக்குமென்று நம்புவதாகவும், அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

ஐந்தாண்டுகளில் 385 மாணவர்கள்; ஒரே ஆண்டில் 365 பேர் பயன்!

தமிழ்நாடு அரசின் சமூகநீதித் துறையின் கீழ் செயல்படும் ஆதி திராவிடர் நலத்துறையால் ஆதி திராவிடர், பழங்குடியினர் போன்ற சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டில் உயர்கல்வி படிப்பதற்கு உதவும் வகையில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை என்ற திட்டம், கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்படுகிறது.

By admin