9
நடிகர்கள் : ரிஷி காந்த், அனீஷ்மா அனில்குமார், பானுப்பிரியா, சங்கீதா பாலன், ஏ. வெங்கடேஷ், அப்துல் லீ, வர்ஷினி, பக்ஸ் பகவதி பெருமாள், சேத்தன் மற்றும் பலர்.
இயக்கம் : ராஜா கருப்பசாமி
மதிப்பீடு : 2.5/5
படத்தின் தலைப்பை பார்த்து சுவாரசியமாக இருக்கக்கூடும் என்ற அவதானிப்பில் படமாளிகைக்குள் சென்ற ரசிகர்களுக்கு படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியை அளித்தார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள தெக்கூர் என்ற கிராமத்தில் வசிக்கும் ஏ. வெங்கடேஷ் – சங்கீதா பாலன் தம்பதியினருக்கு மருது@மருதநாயகம் ( ரிஷி காந்த்) எனும் மகன் இருக்கிறான்.
இவன் சாதிய பாகுபாடு காரணமாக காதலியை இழந்து, அவள் நினைவுகளுடன் அங்கு வாழ பிடிக்காமல், டுபாய் செல்கிறார்.
ஐந்து ஆண்டுகளாக அங்கே பணியாற்றும் மருதுவை அவனுடைய பெற்றோர்கள் பொய் சொல்லி தாயகத்திற்கு வரவழைக்கிறார்கள். வந்த பிறகு தான் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடு நடைபெறுகிறது என தெரிந்து கொள்கிறான். சூழ்நிலை மற்றும் உறவினர்களின் கட்டாயத்தால் முத்துச்செல்வி ( அனீஷ்மா அனில்குமார்) என்ற பெண்ணிற்கு தாலி கட்டுகிறார்.
திருமணம் செய்து கொண்ட பிறகு முதல் இரவில் தன்னை தேற்றிக்கொண்டு, தன் கடந்த காலத்தை மனைவியிடம் சொல்ல விரும்புகிறார் மருது. ஆனால் மனைவி கழிவறைக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு செல்கிறார்.
நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகம் அடைந்த மருது.. கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல, முத்துச்செல்வி அங்கிருந்து தப்பித்து தன் காதலருடன் ஓடிவிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை மருது தெரிந்து கொள்கிறான்.
ஏற்கனவே காதலில் மோசமான அனுபவத்தை பெற்றிருப்பதால்.. அந்தப் பெண்ணை காதலருடன் சேர்த்து வைக்க முடிவெடுக்கிறார் மருது.
முதல் இரவில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் உறக்கத்தை மீறி, இருவரும் சென்று முத்துச்செல்வியின் காதலரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். வந்த காதலர், ‘நான் உன்னை உண்மையிலேயே காதலிக்கிறேனா? இல்லையா? என்பது எனக்குள் சந்தேகமாக இருக்கிறது’ என சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விடுகிறான். அதன் பிறகு இவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள்? என்பதுதான் இப்படத்தின் கதை.
முதலில் இந்த கதையை திருமண நிகழ்வில் தொடங்கி முதலிரவு வரை நேரடியான பாணியில் கதை சொல்லியிருப்பது கதை சொல்லலில் படைப்பாளியின் வலிமை பளிச்சிடுகிறது. மருதநாயகத்தின் காதல் தொடர்பான ஃப்ளாஷ் பேக் வந்துவிடுமோ..! என நினைக்கும் போது அதை குறிப்பால் மட்டுமே உணர்த்தி கடந்து சென்று விடுவது ஆறுதலை தருகிறது.
கிராம பகுதிகளில் இன்றும் உறவினர்களும்.. அவர்களுக்குள் இருக்கும் மண் சார்ந்த… உறவு சார்ந்த…. மற்றும் சாதிய பற்று இயல்பாக வெளிப்பட்டிருப்பது ரசிக்க வைக்கிறது. அதிலும் குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களிடத்தில் தான் சாதிய சிந்தனை இன்றும் உள்ளது என்பதை உணர்த்தி இருப்பதும் வரவேற்கத்தக்கது.
திரையரங்க அனுபவம் தொடர்பான பார்வையில் முதல் பாதியில் திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்வில் மணமகளின் நடனம் ரசிகர்களை கொண்டாட வைக்கிறது. ஆனால் கதைக்கு… கதை மாந்தர்களுக்கு … சூழலுக்கு… எதிர்வினையாற்ற வேண்டிய முத்து செல்வி கதாபாத்திரத்தின் மௌனம்…. வலிந்து திணிக்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.
இது கூட இயக்குநரின் ஆணாதிக்க சிந்தனையை பறைசாற்றுகிறது. உச்சகட்ட காட்சியில் முத்து செல்வியை பேச வைத்திருப்பது வழக்கமான எதிர்பார்த்த டச். ஆனாலும் முத்துச்செல்வி கதாபாத்திரத்தை நுட்பமாக கையாண்டிருக்கிறார் நடிகை அனிஷ்மா அனில் குமார். இதற்காக அவரை பாராட்டலாம்.
மருது@மருதநாயகம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிஷிகாந்த் – இறுக்கமான கிராமப்புற இளைஞர் தோற்றத்திற்கு பொருந்தி.. அதில் தன் அனுபவம் மிக்க நடிப்பை வழங்கி, ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். அத்துடன் திரையுலக வணிகர்கள் மற்றும் படைப்பாளிகளின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
ஏனைய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் இயக்குநர் சொன்னதை மட்டும் செய்து, தங்களின் பங்களிப்பை நிறைவு செய்துள்ளனர்.
கிராம பூசாரி வேடத்தில் நடித்திருக்கும் சேத்தனின் நடிப்பு வழக்கம் போல் சிறப்பு.
முதல் இரவுக்கு பாவிக்கப்படும் மரத்தினாலான கட்டிலை மறு சீரமைப்பு செய்வதும்.. அதனை திருமண வீட்டில் எடுத்து வருவதற்கான முயற்சியும்… ரசிகர்களுக்கு வித்தியாசமான நகைச்சுவையாக அமைந்து சிரிக்க வைக்கிறது.
முத்து செல்வியின் காதலரை சோப்ளாங்கியாக வடிவமைத்திருப்பது.. படைப்பிற்கான சமரசம். தமிழ் சினிமாவிற்கு இந்த கதை புதிது இல்லை என்றாலும்.. அதனை இன்றைய இளம் தலைமுறையினர் ரசிக்கும் வகையில் சொல்லப்பட்டிருப்பதால்.. ஒரு பிரிவு ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுவார்கள்.
சுரேந்திரன் பரஞ்சோதியில் ஒளிப்பதிவும், பரத் சங்கரின் பின்னணி இசையும்… ரசிகர்களுக்கு பட மாளிகையில் படைப்பை காணும் போது உறுத்தலாக இல்லாமல்… உணர்வுடன் கதையில் பயணிக்கும் சுகமான அனுபவத்தை வழங்கியுள்ளனர்.
மொத ராத்திரி – காதலில் தோற்றவனின் டைரி.