தயாரிப்பு : ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ & ஜீ ஸ்குவாட்
நடிகர்கள் : விது, பிரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம்குமார் மற்றும் பலர்.
இயக்கம் : ரத்னகுமார்
மதிப்பீடு : 2 /5
கார்த்திக் சுப்புராஜ் -லோகேஷ் கனகராஜ் -ரத்னகுமார் – கூட்டணியில் உருவாகி இருக்கும் படைப்பு வெளியீட்டிற்கு முன் 29 ஆவது வயதில் தன் சுய அடையாளத்தை தேடும் ஒரு இளைஞனின் தேடலில் கிடைக்கும் காதல் வாழ்வியல் அனுபவங்கள் ஆகியவற்றை விவரிக்கும் படைப்பு என்பதால் ரசிகர்களில் ஒரு பிரிவினர் ஏதேனும் வித்தியாசமான திரை அனுபவம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பட மாளிகைக்குள் சென்றனர். அவர்களுக்கு விரும்பிய அனுபவம் கிடைத்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தமிழகத்தில் சேலம் எனும் பகுதியிலிருந்து பல்வேறு பருவம் சார்ந்த உளவியல் பற்றாக்குறைகளுடன் சென்னை மாநகரத்திற்கு புலம்பெயர்ந்து அங்கு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேருகிறான் சத்யா( விது). அதே நிறுவனத்தில் வாழ்க்கை பற்றிய தெளிவான புரிதல் மற்றும் திட்டமிடலுடன் இயங்கும் விஜி@ விஜயலட்சுமி( பிரீத்தி அஸ்ராணி) யை சந்திக்கிறான்.
அந்த சந்திப்பு காதல் ஆகிறது. இருவரும் காதலர்கள் ஆகிறார்கள். சத்யா- விஜியின் காதலன் என்ற அடையாளத்தை சுமப்பதில் பெருமிதம் கொள்கிறான். தன் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகவும் உணர்கிறான்.
ஆனால் விஜியோ காதல் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி தான். காதலை விட வாழ்க்கை பெரிது என்ற எண்ணத்துடன் இயங்க அதற்கு ஏற்ப செயல்பட அதனையே காதலரிடம் இருந்து எதிர்பார்க்க இங்கு இருவருக்குள்ளும் கருத்து முரண் எழ சூழலும் அவர்களுக்கு எதிராக இருவரும் பிரிகிறார்கள். சத்யாவின் காதல் என்ன ஆனது? விஜியின் வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்பு என்ன ஆனது? என்பதை விவரிப்பது தான் ’29’ படத்தின் கதை.
ஒரு 29 வயதுள்ள இளைஞனின் வாழ்வியலை பத்து அத்தியாயங்களாக இயக்குநர் தொகுத்து வழங்கி இருக்கிறார். இதில் காதல் சார்ந்த அத்தியாயங்களில் இருக்கும் கவித்துவம் ரசிகர்களை கவர்கிறது ஆனால் அதுவே ஒரு புள்ளிக்குப்பிறகு திகட்ட தொடங்குகிறது. ஏனெனில் ஏற்கனவே வெளியான காதல் சார்ந்த படைப்புகளில் இடம்பெறும் வழக்கமான டெம்ப்ளேட் காட்சிகள்.
காதல் வாழ்வில் ஒரு பகுதி தான் காதலை விட வாழ்க்கை பெரிது என்று இயக்குநர் சொல்லி விட்டதால் இரண்டாம் பாதியில் காதலை கடந்து சமூகம் தொடர்பான விடயங்களில் சத்யா பங்குபற்றுவது அது தொடர்பான போராட்டங்கள் – காட்சிகள்- அனைத்தும் செயற்கையாய் திணிக்கப்பட்டது போல் உள்ளது.
சத்யா கதாபாத்திரம் காதலை உணர்ந்து கொள்வதைப் போல் காதலைக் கடந்த வாழ்க்கையை உணர்ந்து கொள்ளாமல் எதிர் கொள்வதை போல் வடிவமைத்திருப்பதால் செயற்கைத் தனம் அப்பட்டமாய் தெரிகிறது.
விஜி கதாபாத்திரத்தை நன்றாக வடிவமைத்திருக்கும் இயக்குநர் அதற்கான திரை மொழியில் பல இடங்களில் சபாஷ் பெறுகிறார்.
உரையாடல்களில் ரத்னகுமார்- தன் திறமையை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அதிலும் காதல் காட்சிகளில் ‘செம’. ( என்ன பாக்க வரும்போது வெறுங்கையோடு வரவே மாட்டியா..!… அவ உதடு திருப்பி போட்ட திருக்குறள் மாதிரி…!)
கதை 2010 ஆம் ஆண்டுகளில் நடைபெறுவது போல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது… ரசிகர்களுடன் எளிதில் தொடர்பு கொள்வதற்கு சாதகமாக மாறாமல் பாதகத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.
காதல் -காதலர்கள்- காதலர்களுக்குள் கருத்து வேறுபாடு- பிரிவு- என்று முதல் பாதியில் சொல்லிவிட்டு இரண்டாம் பாதியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக வேறு தளத்தில் திரைக்கதை பயணிப்பதாலும் அதிலும் ஜீவனற்ற காட்சிகள் இடம்பெறுவதாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு புஸ்ஸாகிறது.
சத்யாவாக நடித்திருக்கும் விது தொடக்கத்தில் ரசிகைகளையும் ரசிகர்களையும் உடல் மொழியாலும் திரை மொழியாலும் கவர்ந்தாலும் இரண்டாம் பாதியில் அவருடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் காட்சிகளில் கதாபாத்திரத்தின் உணர்வை பிரதிபலிக்க தடுமாறுகிறார்.
விஜி@ விஜயலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரீத்தி அஸ்ராணி பல காட்சிகளின் தன்மையை உணர்ந்து தன் நடிப்பால் அதனை மெருகேற்றி ரசிகர்களை வசப்படுத்துகிறார்.
இவரைக் கடந்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளிப்பவர் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். பாடல்களும், பின்னணி இசையும் சபாஷ்.
உச்சகட்ட காட்சி கவனம் ஈர்த்தாலும் அதற்காக பார்வையாளர்களை உளவியல் ரீதியான ஆர்வத்தை தூண்டாமல்.. திரைக்கதையை வளைத்து வளைத்து சொல்லியிருப்பது படைப்பை சாதாரணமாக கடந்து செல்ல வைக்கிறது.
29 – வளையாத வானவில்.
The post 29 | திரைவிமர்சனம் appeared first on Vanakkam London.