• Sat. Jun 6th, 2026

24×7 Live News

Apdin News

அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

Byadmin

Jun 6, 2026


கடந்த பலவருடங்களாக யாழ். போதனா வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வரும் நிலையில் தம்மை அநுர அரசு திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாகவும், நாளைய தினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சையை இடை நிறுத்தி தமக்கான வாய்ப்பை வழங்கவேண்டும் என கோரி தொண்டர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

யாழ. போதனா வைத்தியசாலை முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தினை தொடர்ந்து, அங்கிருந்து  வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை பேரணியாக சென்று, போராட்டத்தை நிறைவு செய்தனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலையான ஊதியம் கூட கிடைக்காது இந்த சேவையை மேற்கொண்டு வந்தோம்.

இது தொடர்பில் கொழும்பில் துறைசார் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய போது, புதிய  நியமனம் வழங்கும் போது, தற்போது தற்காலிகமாக சேவையில் இருக்கும் 120 பேருக்கும் சேவையின் அடிப்படையில் உள்வாங்குவதாகவும் வாக்குறுதி வழங்கியிருந்தனர்.

ஆனால் தற்போது வாக்குறுதி போலியாகிவிட்டது. நாளை நடைபெறவுள்ள நேர்முக தேர்வுக்கு 92 பேர் அழைக்கப்பட்டுள்ள நிலையில் சேவையில் இருந்த 15 பேரே அதில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மிகுதி 77 பேரும் வைத்தியசாலையில் எந்தவொரு சேவையையும் முன்னெடுக்காத அனுபவமற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

இதைவிட மோசடியான விடயமாக 2019 ஆம் ஆண்டின் சுற்றுநிருபத்தின் பிரகாரம் அதற்கு முந்தைய காலத்தில் 180 நாள்கள் சேவையில் இருந்திருந்தால் அவர்கள் உள்வாங்கப்படுவர் என்று கூறப்படுகின்றது.

ஆனால் 2000 ஆம் ஆண்டின் பின் பிறந்த அதிகமானோர் அதில் உள்வாங்கப்பட்டுள்ளது எந்த சுற்றுநிருபத்தின் பிரகாரம் என்று தெரியவில்லை.

இது இந்த அரசின் மோசடியாகவே இருக்கின்றது. எனவே எமக்கான நியமனம் கிடைக்கவேண்டும் அல்லது நாம் தொடர்ந்தும் போராடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

By admin