7
இன்றைய டிஜிட்டல் தலைமுறை ரசிகர்களை திரைப்படங்களை பார்ப்பதற்காக பட மாளிகைக்கு வரவழைப்பதற்கு… தயாரிப்பு நிறுவனங்கள் படைப்பாளிகள் புதிய புதிய உத்திகளை கையாண்டு அவர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள். அந்த வகையில் காதலர்களுக்கு நன்கு அறிமுகமான கவிதை என்னும் காரணியை… ‘ஒன்ஸ்மோர்’ படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக படக் குழு வெளியிட்டு, அசத்தியிருக்கிறது.
இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ்- அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார்.
ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற காதல் கவிதை ஒன்றை நடிகர் அர்ஜுன் தாஸ் தன்னுடைய கணீர் என்ற காந்த குரலில் கவிதையாக வாசித்திருக்கிறார்.
‘ஒரு பூமுகம்.. ஒரு போர்க்களம்… ஒரு சாளரம்… உன்னை இங்கு வந்து தேட…’ எனத் தொடங்கும் அந்த கவிதை ஒன்றரை நிமிடங்களுக்கு மேல் நீடித்து, ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. காதலை – காதலியை தேடி – காதலரின் பயணத்தையும் , அவஸ்தையும் விவரிக்கும் இந்த கவிதை- மண் மணம் மாறாத பண்புடன் வளரும் இளைய தலைமுறையினரிடத்தில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த கவிதையை கவிஞர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுத, அர்ஜுன் தாஸ் குரல் கொடுக்க, ஹேஷாம் அப்துல் வஹாப் இதற்கு இசையமைத்திருக்கிறார். இசையுடன் கூடிய காதல் கவிதையாக வெளியாகி இருக்கும் ‘பதில் சொல்’ எனும் ஒன்ஸ்மோர் பட கவிதை – பல காதலர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் என அவதானிக்கப்படுகிறது.