நேபாள – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கோர திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக நேபாளத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனக் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு, 265 பேர் காணாமல் போயுள்ளனர். இந்த இயற்கை பேரிடரில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்திரீகர்கள் மாயமாகியுள்ளனர்.
மொத்தம் 403 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 62 நேபாள நாட்டினரும், 26 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்கள் மற்றும் 203 ஆண்கள் உள்ளடங்களாக 341 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என நேபாள சுற்றுலா வாரியம் குறிப்பிட்டுள்ளது.
காணாமல் போன வெளிநாட்டினரில் இந்தியாவைச் சேர்ந்த 133 பேர், அமெரிக்காவைச் சேர்ந்த 47 பேர் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த 33 பேர் அடங்குவர். புனிதப் பயணமாக கைலாஷ் மானசரோவர் நோக்கிச் சென்ற யாத்திரீகர்களே இந்த எல்லையோரப் பகுதியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சுற்றுலா நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்கள் மூன்று பஸ்களில் இப்பகுதியில் பயணம் செய்ததாகத் தெரிவித்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டபோது அவர்கள் தப்பிக்க முயன்ற நிலையில், ஒரு பஸ் வீதியை விட்டு விலகி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. தமிழகத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட யாத்திரீகர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. நேபாள இராணுவத்தினர் இவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவே இந்த திடீர் வெள்ளத்துக்கு வழிவகுத்திருக்கலாம் என நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் தெரிவித்துள்ளார்.
திரிசூலி ஆற்றின் குறுக்கே உள்ள இரண்டு பாலங்கள், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பிற இடிபாடுகள் மோதியதில் உடைந்து நொறுங்கின. குடியிருப்புகள், நீர்மின் நிலையங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
நேபாளத்தில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு நிகழ்ந்த மிக மோசமான பேரிடர் இதுவாகும்.
நேபாள பிரதமர் பாலேந்திர ஷா இந்த பேரிடர் குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, மீட்புப் பணிகளுக்கு அரசு தனது முழு வளங்களையும் பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை 114 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 93 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திபெத் பகுதியிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சீன அதிபர் ஷி ஜின்பிங் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு தனிப்பட்ட உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
The post நேபாளத்தில் திடீர் வெள்ளம்: 95 பேர் பலி; இங்கிலாந்து பிரஜைகள் 33 பேர் உட்பட 403 பேரை காணவில்லை! appeared first on Vanakkam London.